2

தமிழின் தனிப்பெருந் தன்மைகள்

  1. மென்மை
    தமிழர் மாந்தன் வரலாற்றிற் குழந்தைபோல் முந்தித் தோன்றிய இனத்தவராதலால், அவர் வாயில் குழந்தைகளும் முதியவரும் களைத்தவரும் நோயாளிகளும்கூட எளிதாய் ஒலிக்கத் தக்கனவும், பெரும்பாலும் எல்லா மொழிகட்கும் பொதுவானவுமான (உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாக) முப்பது எழுத்தொலிகளே பிறந்திருந்தன.  அதோடு, தனி மெய்யொலியில் தொடங்கும் சொற்களும், வல்லின மெய்யொலியில் இறுஞ் சொற்களும், சில மெய்யொலிகட்குப் பின் சில மெய்யொலிகள் தமித்தோ உயிர்மெய்யாகவோ  இடையில் வருஞ் சொற்களும், அவர் வாயில் வந்ததில்லை. இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பல் என்னும் முறையில், அக்காலத்து வரையறுக்கப்பட்ட முதலிடை கடை யெழுத்து வரம்புகளே, இக்காலத் திலக்கண நூல்களும் ஏற்றுக் கூறுகின்றன. தமிழினின்றே திரிந்த திரவிடம் உட்படப் பிறமொழிகளில் இத்தகைய வரம்பீடில்லை அதனால்,
    எண்பெயர் முறைபிறப் புருவம் மாத்திரை
முதலீ றிடைநிலை போலி யென்றா
பதம்புணர்ப் பெனப்பன் னிருபாற் றதுவே’’
என்னும் நன்னூல் நூற்பாவிற் குறிக்கப்பட்டுள்ள எழுத்திலக்கணம் பன்னிரண்டனுள், “முதலீ றிடைநிலை” என்னும் மூன்றும் தமிழுக்கே சிறப்பாக  வுரியனவாம். பிற மொழிகளில் எந்த எழுத்தும் எந்த இடத்திலும் வரலாம் . தமிழில் அங்ஙனம் வரமுடியாது.
    இனி, வடமொழி வல்லின மெய்களின் நால்வகையுள், உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கும் பின் மூன்று வகைகளேயன்றி, இயல்பானதாகக் கருதப்படும் முதல் வகையும், தமிழ் வல்லினத்தோடு ஒவ்வாது இருமடி வலித்தொலிக்கும் கடுவல்லினமாம். காகத்தைக் குறிக்கும் ‘kaka’ எனும் வடசொல் வடிவம். தமிழில் ‘காக்க’ என்று ககரம் இரட்டித்து எழுதப் பட்டால்தான், ஒருமருங்கு வடமொழியை ஒத்தொலிக்க முடியும். ‘மேக்கர்’ (maker) என்னும் ஆங்கிலச் சொல்லும் இத்தகையதே. இவ் வேறுபாட்டை, எழுத்தொலிகளை நுண்ணிதாகக் கண்டவர்போல் தம்மைக் காட்டிக் கொள்ளும் மேலை வண்ணனைமொழி நூலாரும் இன்னும் அறியவில்லை.
    மெலியும் வலியுமாக அடுத்துவரும் ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற என்னும் இணைமெய்கள், ஆரியத்திலும் திரவிடத்திலும் போல ‘ங்க்க’, ‘ஞ்ச்ச’,‘ ண்ட்ட’,‘ ந்த்த’, ‘ம்ப்ப’, ‘ன்ற்ற’ என்று என்றேனும் தமிழில் வலித்தொலிப்பதில்லை.
    மூச்சொலி (Aspirate) தமிழில் இல்லவேயில்லை. எடுப்பொலி (Voice Sound) மெலியடுத்த வலிக்கே யுண்டு.
    சொல்லிடையில் நிகழும் உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்னும் இருவகை மெய்ச் சேர்க்கையுள், முன்னதில் இரண்டாவது மெய் ‘சுக்கு’. ‘பட்டு’ என்பவற்றிற்போல் உயிரோடு கூடியதாகவே யிருக்கும்; பின்னதில் இரண்டாவது மெய் காய்ப்பு. வாழ்க்கை என்பவற்றிற் போல் தனிமெய்யாகவோ, ‘வெட்கம்‘, ‘பயிற்சி’  என்பவற்றிற்போல் உயிரோடு கூடிய மெய்யாகவோ இருக்கும். ஆயின், இரு தனி மெய்களே யன்றி, ‘சா(ஸா)ந்த்வ், ‘சமற்க்ருத’ என்னும் வடசொற்களிலும், camps, tempts என்னும் ஆங்கிலச் சொற்களிலும் போல், முத்தனி மெய்களும் நாற்றனி மெய்களும் தமிழில் வரவே வரா.
    இங்ஙனம் தமிழ் பெரும்பாலும் மெல்லோசை மொழியாயிருப்பதனாலேயே, அஃது உலக முதன்மொழியாய்த் தோன்றியும் இறந்து படாமல் இன்னும் இளமை நிலையில் இருந்து வருகின்றது. அதைத் தாய்மொழியாகக் கொண்டவரும் முயற்சி வருத்தமின்றி எளிதாகப் பேசி வருகின்றனர். காலஞ்சென்ற பா.வே. மாணிக்க நாயகர், ஒரு முறை உலகப் பெருமொழிகளுள் ஒவ்வொன்றிலும் அவ் வாயிரம் சொற்களை யெடுத்து, அவற்றிற்குச் செலவிடும் மூச்சை மூச்சுமானி கொண்டு அளந்து பார்த்ததில், சமற்கிருதத்திற்கே மிகுந்தும் தமிழுக்கு மிகக் குறைந்தும் இருப்பதாகக் கண்டார். இவ் வுண்மையையே, மறைமலையடிகள், க்ருதம், த்ருசு(ஷ்)டி, த்வரிதம், ச்ருசு(ஷ்)டி, இ(ஹ்)ருதய என்னும் வடசொற்களோடு, இழுது, பார்வை, விரைவு, படைப்பு, நெஞ்சம் என்னும் தென்சொற்களை ஒப்புநோக்கி எளிதாக விளக்கிக் காட்டினார்.
    ஒரு மொழிக்கு வேண்டியது சொல் வளமே யன்றி ஒலிவளமன்று. ஆரியம், சேமியம் முதலிய மொழிக் குடும்பங்கள் தோன்றாத அத் தொல் பண்டைக் காலத்திலும், எக்காலத்தும் மாந்தன் உள்ளத்தில் எழக்கூடிய கருத்துகளை யெல்லாந் தெரிவிக்கத் தக்க சொற்களையும் சொல்லுறுப்புகளையும், நம் குமரிநாட்டு முன்னோர் படைத்து வைத்துள்ளனர். ஆதலால். ஒலிமென்மையால் தமிழுக்கு உயர்வேயன்றி இழிவில்லை என்றும், அதைப் பேசுவார்க்கு மூச்சு வருத்தமும் பேச்சு வருத்தமு மின்மையால்  வாழ்நாள் நீடிக்குமென்றும், அறிந்துகொள்க.
மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் :
  செந்தமிழ்ச் சிறப்பு
(தொடரும்)