‘தமிழும், தமிழரும் செழிக்க

உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்’

– சென்னையில் நடைபெற்ற தமிழ் உலகச் சந்திப்பு!

   (புரட்டாசி 15, 2047 / 01-10-2016 அன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள உமாபதி அரங்கில் உலகத் தமிழர் பேரவை நடத்திய ‘தமிழ் உலகச் சந்திப்பு’ நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கனடா, சிங்கப்பூர், மலேசியா, ஈழம் முதலான பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்த் தேசத்தவர்களும், தமிழகம், ஆந்திரா, மகாராட்டிரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசத்துப் பற்றாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்; சிறப்பித்தனர். உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்கினி இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
  தொடக்கத்தில். உலகத் தமிழர் பேரவையின் நிறுவனரான காலம் சென்ற முனைவர் திரு. இரா.சனார்தனன் திரு உருவப் படத்தை அவரது மிக நெருங்கிய நண்பர்களான எழுத்தாளர் திரு. குணசேகரன், பாரத்து பல்கலைக்கழகத் துணை இயக்குநர் திரு. தியாகு., தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் மகள் திருமிகு மணிமேகலை கண்ணன்,  கனடாவில் இருந்து வந்திருந்த திரு. தங்கவேலு வேலுப்பிள்ளை ஆகியோர் திறந்து வைத்தனர்.
  கனடாவில் இருந்து வந்திருந்த ஈழத்தமிழர் திரு. தங்கவேலு வேலுப்பிள்ளை, “தமிழர்கள் அனைவரும் வீட்டில் கட்டாயம் நல்ல தமிழில் பேச வேண்டும். தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசக் கூடாது. அப்போது தான் தமிழ் அடுத்த தலைமுறைக்கும் வாழும்” என்பதைச் சுட்டிக் காட்டினார். மேலும் அயலகத்தில் உள்ள தமிழர்களிடம் தமிழை வளர்க்க தமிழக அரசு தனித்துறையை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
 சிங்கப்பூரிலிருந்தது வந்திருந்த திரு. அ.வை.கிருட்டிணசாமி, “தற்போது தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டிருக்கும் எங்களது நாட்டைப்போல், பழங்காலத் தமிழர்கள் கவனமாக இருந்திருந்தால், உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ்தான் ஆட்சி இருந்திருக்கும்” என்றார்.
 மூத்த தமிழ்ப் பற்றாளர் திரு குமரி ஆனந்தன் அவர்கள் பேசும்போது, ‘1978 ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்றத்தில் நான் தமிழில் பேசினேன். அப்போது அங்கிருந்த இந்தி உறுப்பினர்கள் ‘முட்டாளே இருக்கையில் அமர் , தமிழில் பேசாதே’ என்றார்கள். நான் முட்டாள் அல்ல தமிழில் தான் பேசுவேன் என்றேன். அது தொடங்கிப் பாராளுமன்றத்தில் தமிழில்தான் பேசி வந்தேன். பாராளுமன்றத்தில் தமிழில் பேசலாம் என்ற உரிமையை நான் நிலைநாட்டினேன்.
  ஆனால் அதன் பிறகு தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பேசுவதை இது வரை தவிர்த்தே வந்துள்ளனர். இப்போது பாராளுமன்றத்தில் உள்ள நாற்பது உறுப்பினர்களுள் ஒருவர் கூடத் தமிழில் பேசுவதில்லை என்பது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. பாடுபட்டு வாங்கிய உரிமையைக் கூடத் தமிழகத்து அரசியல்வாதிகள் பாதுகாக்க முன்வரவில்லை’, என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
 மும்பையிலிருந்து வெளிவரும், தமிழ் இலெமுரியாவின் ஆசிரியர் திரு. குமணராசா , “உலகத் தமிழர் பேரவையை உலகு முழுக்க எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்போம்” என்றார்.
 ஐதராபாத்திலிருந்த வந்திருந்த மூத்த ஊடகவியலாளர் திரு. சுபாசு சந்திரன், இந்நிகழ்ச்சியை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏற்பாடு செய்திருந்த உலகத் தமிழர் பேரவைக்கு நன்கொடையாக உரூபாய் பத்தாயிரத்தை வழங்கிச் சிறப்பித்தார்.
  ‘எழுகதிர்’ ஆசிரியர் திரு அருகோ,  “தமிழகத்தில் தமிழர் ஆட்சி மலராமல் தமிழ் நாட்டில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் உயர்வில்லை” என்பதைச் சுட்டிக் காட்டினார். “திராவிட ஆட்சியில்தான் தமிழ் வழிக் கல்விக்கு மூடுவிழா காணப்பட்டது. அதனாலேயே தமிழ் மொழியின் வளர்ச்சி தடைபட்டது” என வருத்தத்துடன் தெரிவித்தார். “ஈழத்தில் தமிழர்கள் உரிமையுடன் வாழவும் தமிழகத்தில் தமிழர் ஆட்சி மலர வேண்டும்” என்றும் கூறினார்.
  இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசும்போது, தமிழர்கள் சாதியாலும், மதத்திலும் பிரிந்து கிடக்காமல் தமிழர் என்ற உணர்வுடன் ஒற்றுமையுடன் இருந்தால் தமிழர்களை யாரும் எளிதில் தாக்க முடியாது . பிரிந்து நின்றால் யார் வேண்டுமானாலும் தமிழர்களைத் தாக்க முற்படலாம் என்பதை விளக்கினார் .
“தமிழர்களின் கோரிக்கைகள், கருத்துக்கள் சட்டமன்றத்தில் எதிரொலிக்க எப்போதும் தமிழகச் சட்டமன்றத்தில் தமிழர் குரலாக ஒலிப்பேன்” என்று சட்டமன்ற உறுப்பினர் திரு. தமிமுன் அன்சாரி கூறினார்.
  நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் தமிழகத்தில் தமிழர் ஆட்சி வேண்டும்; தமிழ் மொழியை எங்கும் எதிலும் பயன்படுத்த வேண்டும்; தமிழர்கள் சாதி, மதம் அரசியல் கருத்தியல் முதலானவற்றால் பிரிந்து நிற்காமல் பிற தேசிய இனத்தவர்கள் போல ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தினார்கள்.
  அடுத்தடுத்து வரும் தமிழ் உலகச் சந்திப்பில் மேலும் பல தமிழர் சார்ந்த புதிய திட்டங்கள் முன்வைத்துச் செயல்படுத்தப்படும் என்பதை உலகத்தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி தெரிவித்தார்.
  இந்நிகழ்வில், புலவர் கி.த.பச்சயப்பனார் (ஒருங்கிணைப்பாளர், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு), ஒவியர் சந்தானம், தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவர், திரு. தங்கர் பச்சான் (திரைப்பட இயக்குநர்), திரு. வீ.சேகர் (திரைப்பட இயக்குநர்), திருமிகு மணிமேகலை கண்ணன்-தமிழகப் புலவர் குழுவின் பொறுப்பாண்மைக்குழுத் தலைவர் (தமிழறிஞர்  -கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் மகள்), வழக்குரைஞர் சக்திவேல் (தலைவர், மக்கள் மாநாட்டுக் கட்சி), திரு. இரா.சொ. இராமசாமி (தலைவர், கோவை முத்தமிழ் அரங்கம்), திரு. குணசேகர், கோவை (எழுத்தாளர்), திரு. தியாகு(துணை இயக்குநர், பாரத்து பல்கலைக்கழகம்), புலவர் இரத்தினவேல், புதுச்சேரி, புலவர் காளியப்பன், கோவை, திரு. புதுவைத் தமிழ் உலகன், புதுச்சேரி, திரு. நமச்சிவாயம், மதுரை, திரு. வான்முகம்(ஏர்போர்ட்டு) மூர்த்தி, சென்னை, வழக்குரைஞர் சிகரம் செந்தில் நாதன், திரு. அதியமான் (தலைவர், தமிழர் முன்னேற்ற சங்கம்), திரு. இராசுகுமார் பழனிசாமி (தமிழர் பண்பாட்டு நடுவம்), திரு. வெற்றி (தலைவர், இந்தியச் சுதந்திர கட்சி) எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள், அறிஞர் பெருமக்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் இன உணர்வை வெளிப்படுத்தினர்.
  இந்நிகழ்ச்சிக்குத் துணை நின்று உடன் பயணித்த உலகத்தமிழர் பேரவையின் பொறுப்பாளர்கள், திரு. கோபி. நாராயணன், சென்னை (பட்டயக் கணக்கர்), திரு. உல்லாச குமார், வெங்காளூர் (பெரு வணிகர்) ஆகியோர் நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர்.
  தமிழ் ஆர்வலர் திரு. வடிவேல் முருகன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வின் இறுதியில்,
– உலகு முழுக்க உள்ள தமிழர்களை இனத்தால் ஒருங்கிணைப்பது.
– தமிழரின் மொழி, வரலாறு, கலை, இலக்கியம்,  பண்பாடு போன்றவற்ற‌ை மேம்படுத்திப் பாதுகாப்பது.
– அரசியல், மதம், சாதிகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள்.
– உலகளவில் நிகழக் கூடிய மனித நேய செயல்பாடுகளில் இணைந்து கொள்வது.
போன்ற செயற்பாடுகளைக் கொண்டு, ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்கிட அனைத்து வழிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று உலகத்தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்கினி அவர்கள் சொல்லி, அரங்கு நிறைந்த கூட்டமாக வந்திருந்தவர்களுக்கு நன்றி கூறி நிகழ்வினை முடித்து வைத்தார்.
 கூட்டத்திற்கு முன்னதாக உலகத்தமிழர் பேரவையின் கலந்துரையாடல் கூட்டம் முதன்மைப் பங்காளர்களை கொண்டு நடைபெற்றது. இதில் வருங்காலத்தை மனதிற் கொண்டு, பல முதன்மை முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
  தமிழ் உலகச் சந்திப்பில் தமிழ்த் தேசத்தவர்கள். மதமோ சாதியோ தமிழர்களைப் பிரிக்க முடியாது என  உணர்த்தும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இசுலாமியத் தமிழர் திரு, தமிமுன் அன்சாரி, தமிழர் மதத் தலைவர் பேரூர் ஆதீனம் திரு. மருதாசல அடிகளார் ஒருவருக்கு ஒருவர் தங்கள் தமிழ்ப் பற்றை வெளிப்படுத்தித் தழுவிக் கொண்டனர். இந்நிகழ்வால், சாதியோ மதமோ தமிழர்களை இனி பிரிக்க முடியாது என்பதை உலககுக்குப் பறைசாற்றியது. ஆம், தமிழர்கள் ஒன்றுபட்டு விட்டார்கள்.
தரவு: இராசுகுமார் பழனிசாமி, தமிழர் பண்பாட்டு நடுவம்

காண்க : தமிழ் உலகச் சந்திப்பு – ஒளிப்படங்கள்