எழுவர்-கருணா-செயாeahuvar_karuna_jeyavaiko01

ஏழு பேர் விடுதலையில் கலைஞர் – செயலலிதா

நாடகங்களை மக்கள் மறந்துவிடவில்லை! – வைகோ

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை:
  கடந்த பிப்பிரவரி 23ஆம் நாள், வேலூர்ச் சிறையிலிருந்து காப்பு விடுப்பில்(parole) வந்த நளினி, மறைந்த தன் தந்தையின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டார். “பிரியங்கா காந்தி உங்களைச் சந்தித்தபொழுது என்ன பேசினார்” என்ற சூனியர் விகடன் செய்தியாளரின் கேள்விக்கு, “அதை இப்பொழுது சொல்ல முடியாது. ஆனால், அவர் என்னிடம் மிகவும் மிரட்டல் தொனியில் பேசினார். அங்கிருந்து கிளம்பும்பொழுது எனக்கு எந்த வசதியும் செய்து தரக்கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்றார்” என்று திகைப்புத் தகவலைக் கூறியிருக்கிறார் நளினி.
  சிறை நெறிகளையும், சட்ட மரபுகளையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, அன்றைய முதல்வர் கலைஞர், பிரியங்கா வேலூர்ச் சிறையில் நளினியைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்தார். 2008 மார்ச் 19ஆம் நாள் வேலூர்ச் சிறையில் நளினி – பிரியங்கா சந்திப்பு நடந்தது. ஆனால், பதிவேட்டில் அன்றைய நாளில் பிரியங்கா, நளினியைச் சந்தித்த எந்தக் குறிப்பும் இல்லை. அப்பொழுது நடுவண் காங்கிரசுக் கூட்டணி அரசில் தி.மு.க இடம் பெற்று இருந்தது. ஆட்சியுரிமை தங்கள் காலடியில் என்ற ஆணவத்துடன் சட்டத்தை மீறிப் பிரியங்கா வேலூர்ச் சிறைக்கு வந்து கமுக்கமாக நளினியைச் சந்திப்பதற்குக் கலைஞர் ஒப்புதல் வழங்கினார்.
  வேலூர்ச் சிறைக்குப் பிரியங்கா வந்திருந்தபொழுது கைதிகள் அனைவரையும் நடமாட விடாமல் சிறையில் அடைத்துவிட்டு, திடீரென்று நளினியை சிறைக் கண்காணிப்பாளர் அறைக்கு அழைத்துச் சென்று பிரியங்காவைச் சந்திக்க வைத்துள்ளனர். அப்பொழுது நடந்ததையே நளினி தனது செவ்வியில் (interview) கூறி உள்ளார். சட்டப் புறம்பாக வேலூர்ச் சிறையில் நளினியைச் சந்தித்த பிரியங்கா, அவரை மிரட்டி, சிறைக்குள் கைதிகளுக்குரிய அடிப்படை உரிமைகளைக் கூடத் தரக்கூடாது என்று மனிதநேயம் இன்றிக் கட்டளை போட்டிருக்கிறார். இது வெளிப்படையான ஆளுரிமை அதிகாரம் அத்துமீறலாகும். இந்தக் கொடுமைக்கு அப்பொழுதைய முதல்வர் கலைஞர் உடந்தையாக இருந்தார். முதலாளி சோனியாவின் மகள் பிரியங்கா கட்டளை போட்டதை கலைஞர் அரசு செயல்படுத்தியதின் விளைவாக, நளினி சிறையில் கொடிய சித்திரவதைகளைத் துய்க்கும் (அனுபவிக்கும்) துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
  பிரியங்கா வேலூர்ச் சிறைக்கு வந்து நளினியைச் சந்தித்துவிட்டுச் சென்ற பின்னர் ஈழத்தில் விடுதலைப் புலிகள் மீதான போர் தீவிரமடைந்தது. காங்கிரசுக் கூட்டணி அரசின் உதவியைப் பெற்று, பல நூறாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தான் இராசபக்சே.
  தங்களுக்குத் தீர்ப்பளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைப் பரிவு (கருணை) அடிப்படையில் தள்ளுபடி செய்து தங்களைக் காக்குமாறு நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தமிழக ஆளுநருக்குப் பரிவு விண்ணப்பங்கள் அனுப்பி இருந்தனர். நளினிக்குப் பரிவு காட்டலாம் என்று சோனியா காந்தி கருதுவதாகக் கூறி, நளினியின் தூக்குத் தண்டனையை மட்டும் தள்ளுபடி செய்வதற்குத் தனது அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்த அன்றைய முதல்வர் கலைஞர், மற்ற மூவரின் தூக்குத் தண்டனை குறித்து எந்த முடிவும் எடுக்காமல், அவர்களின் கோரிக்கையைப் புறக்கணித்தார். அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி, அமைச்சரவை முடிவை ஏற்றுக் கொண்டு நளினியின் தூக்குத் தண்டனையை மட்டும் தள்ளுபடி செய்து, மற்ற மூவரின் கோரிக்கை விண்ணப்பங்களை ஏற்காததால், மூவரும் குடியரசுத் தலைவருக்குப் பரிவு விண்ணப்பங்களை அனுப்பினர்.
  ஆனால், பின்னாளில் இவற்றை எல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள் என்று எண்ணி ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தற்பொழுது ஆதரிக்கிறார். இப்படிப்பட்ட ஏமாற்று வேலை அவருக்குக் கைவந்த கலை.
  நளினியின் தூக்குத் தண்டனை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட பின்னர், 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் வாழ்நாள் கைதியான தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு தமிழக அரசுக்கு விண்ணப்பித்தார். 2008ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்திலும் தன்னை விடுவிக்கக் கோரி நளினி வழக்குத் தொடர்ந்தார். இதற்கு பதிலளிக்காமல் கலைஞர் அரசு இரண்டு ஆண்டுகள் இழுத்தடித்தது. அதன் பிறகு உயர்நீதிமன்றம் தலையிட்டு நளினி விடுதலை குறித்துப் பரிந்துரைக்க அறிவுரைக்குழு ஒன்றை அமைக்கும்படி தமிழக அரசுக்கு ஆணையிட்டது.
  வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலைஞர் அரசு அறிவுரைக்குழு அமைத்தது. இக்குழு 2010 ஏப்பிரலில் உயர்நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், “நளினி மிகக் கடுமையான குற்றம் புரிந்துள்ளார். இந்திய முன்னாள் தலைமையமைச்சர் இராசீவு காந்தியைக் கொலை செய்யும் திட்டம் நளினிக்கு ஏற்கெனவே தெரிந்து இருக்கிறது. நளினியின் பெற்றோர் சென்னையில் கங்கையம்மன் தெருவில் வாழ்கின்றனர். இது முதன்மைப் புள்ளிகள் வாழும் பகுதி. அமெரிக்கத் தூதரகம் போன்ற முதன்மையான அலுவலகங்கள் உள்ளன. நளினி அங்கு சென்று தங்கினால் சட்டம் ஒழுங்குச் சிக்கல் ஏற்படக்கூடும். 18 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்காக முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது” என்றெல்லாம் காரணம் கூறி விடுதலையைத் தடுத்தது.
  2010இல் நளினியை விடுவிக்க முடியாது என்று கூறிய கருணாநிதிதான் இன்று நளினி முதலான ஏழு பேரை நடுவண் அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். காங்கிரசுக் கட்சியுடன் கூட்டணி வைத்து, நடுவண் அமைச்சரவையில் தி.மு.க பதவியில் இருந்தபொழுதும், கலைஞர் தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பில் இருந்தபொழுதும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் முதலான எழுவரின் விடுதலைக்கு எள்முனை அளவு கூட முயற்சிக்கவில்லை என்பதைத் தமிழக மக்கள் மறந்துவிடவில்லை.
  நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் தந்தையைப் பார்த்துக் கொள்ள ஒரு மாதம் காப்பு விடுப்பில் (parole) செல்ல ஒப்புதல் வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி விண்ணப்பம் அளித்தார். நளினியைக் காப்பு விடுப்பில் செல்ல விட்டால், சட்டம் ஒழுங்குச் சிக்கல் ஏற்படும் என்று செயலலிதா அரசு பதில் கூறியது. தன் தந்தையைப் பார்ப்பதற்கு நளினி காப்பு விடுவிப்புக் கேட்டு விண்ணப்பித்தபொழுதெல்லாம் செயலலிதா அரசு ஒப்புதலளிக்க மறுத்தது. செயலலிதா அரசு மனிதநேயம் சிறிதும் இன்றி, தன் தந்தை உயிருடன் இருந்தபொழுது பார்க்கும் வாய்ப்பைக் கூட 25 ஆண்டுக் காலம் சிறையில் வாடும் நளினிக்கு வழங்க மறுத்தது.
  அரசியல் சட்டத்தின் 161ஆவது பிரிவின் கீழ் வேலூர்ச் சிறையில் உள்ள நளினி முதலான 7 பேரை மாநில அரசே விடுதலை செய்யச் சட்டப்படியான உரிமை உள்ளபொழுதும், தலைமைச் செயலாளர் மூலம் முதல்வர் செயலலிதா நடுவண் அரசுக்கு கடிதம் எழுதி இருப்பது அரசியல் ஆதாயம் தேடும் ஏமாற்று வேலை என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.”