மாட்டுக்கறி உண்ட பிராமணர் :bhramins_beef

பௌத்தத்தை முறியடிக்கவே பிராமணர்கள் மரக்கறி உண்டனர்

  அக்காலத்தில் பிராமணர்கள் வீட்டிற்கு யாரேனும் விருந்தினர்கள் வந்தால், அவர்களைப் பெருமைப்படுத்த ஆ(பசு)வைக் கொன்று அவருக்கு விருந்தளிக்க வேண்டியிருந்தது. இதனால் அந்த விருந்தாளி ‘கோக்னா’ என்று அழைக்கப்பட்டு, வெறுக்கப்பட்டார். இது போன்றே ஆ வதையைச் செய்பவர்கள் என்று பிராமணர்கள் அனைவரும் வெறுக்கப்பட்டு வந்தனர்.
  இத்தகைய இக்கட்டான நிலைமையில், ஒரு வழிபடும் முறையாக வேள்வியை நிறுத்துவதையும், மாட்டு வதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் தவிர பௌத்தர்களுக்கு எதிராகத் தங்கள் நிலைமையை மேம்படுத்திக் கொள்ளப்  பிராமணர்களுக்கு வேறு வழியில்லை.
  மாட்டிறைச்சி உண்பதைப் பிராமணர்கள் நிறுத்தியதன் நோக்கம் பௌத்தத் துறவிகளிடமிருந்து மேலாளுமையைக் கைப்பற்றுவதே என்பது, பிராமணர்கள் மரக்கறி உணவுக்கு மாறியதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. பிராமணர்கள் சைவ உணவாளர்களாக மாறியது ஏன்? அவர்கள் மரக்கறி உணவாளர்களாக மாறவில்லை என்றால் தங்களுடைய எதிராளிகளிடமிருந்து – அதாவது புத்தச்சமயத்திடமிருந்து – தாங்கள் இழந்த செல்வாக்கை மீட்க முடியாது என்பதே இக்கேள்விக்கு அளிக்கக்கூடிய சரியான விடையாக இருக்க முடியும்.
  புத்தச்சமயத்துடன் ஒப்பிடும்பொழுது, பிராமணியம் பொது மக்களின் நன்மதிப்பை இழக்கக் காரணமாக இருந்த ஒரு கூற்றை (அம்சத்தை) இங்கு நினைவுகூர்வது இன்றியமையாதது. விலங்குகளைப் பலியிடும் நடைமுறையே அது. இது பிராமணியத்தின் அடிப்படைச் சாரமாக இருந்தது. அதே நேரத்தில் புத்தச்சமயம் இதைக் கடுமையாக எதிர்த்தது. எனவே, உழவைத் தொழிலாகக் கொண்ட பெருவாரியான மக்களிடையே புத்தச்சமயம் மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்ததும் ஆ(பசு)க்கள், எருதுகள் முதலான விலங்குகளைக் கொன்று குவிக்கும் பிராமணியத்திடம் அவர்கள் அருவெறுப்புக் கொண்டிருந் ததும்  முற்றிலும் இயல்பே.
  இத்தகைய நிலைமையில் பிராமணர்கள் தாங்கள் இழந்த செல்வாக்கை எவ்வாறு மீட்க முடியும்? இறைச்சி உண்பதைக் கைவிடுவதன்  மூலமும் மரக்கறி உண்பவர்களாக மாறுவதன்  மூலமும்தான் இதைச்  செய்ய முடியும். இதைத்தான் அவர்கள் செய்தார்கள். பிராமணர்கள் சைவ உணவாளர்களாக மாறியதன் நோக்கமே இதுதான் என்பதைப் பல்வேறு வழிகளில் மெய்ப்பிக்க முடியும்.
  விலங்குகளைப் பலியிடுவது இழிவான செயல் என்பதைப்  பிராமணர்கள் உள்ளபடியே உணர்ந்து செயல்பட்டார்கள் என்பது உண்மையானால் அவர்கள் செய்திருக்க வேண்டியதெல்லாம் வேள்விகளில் விலங்குகளைப் பலியிடுவதை நிறுத்துவதுதான். அவர்கள் சைவ உணவாளர்களாக மாற வேண்டிய தேவையே இல்லை. அவ்வாறிருக்கும்பொழுது அவர்கள் மரக்கறி உணவை மேற்கொண்டதற்கு முதன்மையான ஓர் உள்நோக்கம் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவு. இரண்டாவதாக, அவர்கள் காய்கறி உணவு உண்பவர்களாக மாறவேண்டிய தேவையே இல்லை. ஏனென்றால், பௌத்தத்துறவிகள் சைவ உணவு உண்பவர்கள் அல்லர்.
  இவ்வாறு கூறுவது பலரை வியப்படைய வைக்கலாம். ஊறு செய்யாமைக்கும்(அகிம்சை) புத்தச்சமயத்திற்கும் இடையே உள்ள தொடர்பு பிரிக்க முடியாதது, அடிப்படையானது, இன்றியமையாதது என மக்களிடம் நிலவும் ஆழமான நம்பிக்கையே இதற்குக் காரணம். பௌத்தத் துறவிகள் புலால் உணவைத் தொடுவதில்லை, அதனை அவர்கள் தவிர்த்து வந்தார்கள் என்று பொதுவாகக் கருதப்பட்டு வந்தது. இது தவறு!
  இதிலிருந்து, பௌத்தத் துறவிகளே புலால் உண்டனர் என்பது தெள்ளத் தெளிவாகிறது. அப்படியிருக்கும்பொழுது பிராமணர்கள் புலால் உணவைக் கைவிடக் காரணமே இல்லை. பின்னர் ஏன் பிராமணர்கள் இறைச்சி உண்பதை விடுத்து, மரக்கறி உணவாளர்களானார்கள்? தாங்களும் பௌத்தத்துறவிகளைப் போன்றவர்களே  என்பதைப் பொதுமக்கள் பார்வையில் காட்டிக்கொள்ள அவர்கள் விரும்பியதே இதற்குக் காரணம். புலால் உணவு உண்பதில் பௌத்தத் துறவிகளின் நெறிமுறைகளை அவர்கள் பின்பற்றியிருந்தாலும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும்.
  பௌத்தர்கள் மீது தங்கள் மேலாளுமையை நிலைநாட்ட வேண்டுமென்று பிராமணர்கள் கொண்டிருந்த பேரார்வத்தை நிறைவேற்ற அஃது உதவ முடியாது. வேள்விகளுக்காக மாடுகள் பலியிடப்படுவதை எதிர்ப்பதன் மூலம் பெருவாரியான மக்களின் மனதில் மிகுந்த நம்பிக்கையையும் மரியாதையையும் பெற்றிருந்த பௌத்தர்களை அந்த உயரிய இடத்திலிருந்து கீழே இறக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் விரும்பினார்கள்.
  தங்களது இந்தக் குறிக்கோளை அடைவதற்குப் பிராமணர்கள் மற்றவர்களது கண்களில் மண்ணைத் தூவும் தீரச் செயல்களில் ஈடுபட வேண்டியிருந்தது. வன்கொடுமைத்தனத்தை (தீவிரவாதத்தை) வன்கொடுமைத்தனத்தால், முள்ளை முள்ளால் எடுக்கும் நடவடிக்கையே இது. இடதுசாரிகளைச் சமாளிப்பதற்கு வலதுசாரிகள் எல்லாரும் வழக்கமாகக் கைக்கொள்ளும் சூழ்ச்சியே இது.
  பௌத்தர்களை முறியடிப்பதற்கு அவர்களை விடவும் ஒரு படி மேலே சென்று மரக்கறி உணவாளர்களாக மாறுவதுதான் பிராமணர்களுக்கு ஒரே வழியாக இருந்தது. அதைச் செய்ய அவர்கள் தயங்கவில்லை. அந்தச் சூழ்ச்சி பலித்து விட்டதையும் இன்று நாம் பார்க்கிறோம். பௌத்தம் அழிந்தது; சைவ உணவுக் கோட்பாட்டை வலியுறுத்தும் சமயமாக இந்துச் சமயம் இன்று அனைவராலும் நம்பப்படுகிறது.
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_e.bhu.gnanaprakasan
முத்திரை- கீற்று : muthirai_Keetru_logo
[குறிப்பு :இதுபோல் கருத்துகள் கூறப்படுகின்றன. இனத் தலைமை எடுத்த முடிவிற்கு இனமே கட்டுப்பட்டுச் செயல்படுத்திஉள்ளனர் என்னும்பொழுது பிராமணர்கள் இதன் தொடர்பில் பாராட்டிற்குரியவர்களே! அக்கட்டுக்கோப்பை நாம் பின்பற்றாமையே தாழ்வு! – அகரமுதல]