செவ்வாய், 19 ஜனவரி, 2016

அம்மா அழைப்பு மையம்: செயலலிதா தொடங்கி வைத்தார்


மக்கள் குறைகளைக் கேட்க அம்மா அழைப்பு மையம்:  செயலலிதா இன்று  (தை 05, 2047 / சனவரி19, 2016) தொடங்கி வைத்தார்.




  பொதுமக்களின் குறைகளை விரைந்து பெற்று, அதனைக் களைந்திடும் நோக்கில், கனிணிவழி தொலைபேசி அழைப்பு ஒருங்கிணைத்தல், குரல் பதிவு, பிரித்தறிதல் போன்ற புதிய தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன், 24/7 மணிநேரமும் செயல்படும், கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1100 மூலம் எங்கிருந்தும், எப்போதும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் ‘‘அம்மா அழைப்பு மையம்’’ அமைக்கப்பட்டுள்ளது.

  முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15,000 அழைப்புகளை ஏற்கும் வகையில், 138 அழைப்பு ஏற்பாளர்களுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கேற்ப அழைப்பு ஏற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

  முதல்அமைச்சர்  செயலலிதாவால் இன்று தொடக்கி வைக்கப்பட்ட இந்த மையத்தின் மூலம், பொது மக்களிடமிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் விவரம், குறைகள் ஆகியவை கணிணியில் பதியப்பட்டு,  தொடர்புடைய துறை அதிகாரிக்கு மின்னஞ்சல், தொலைபேசி, குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.

  அதுமட்டுமின்றி, எந்தத் துறையின், எந்த அதிகாரிக்கு அவரது குறைகள் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரம் அழைத்தவருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். மேலும், அவரது குறை குறித்து தொடர்புடைய துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரமும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

  நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் ஞானதேசிகன், அரசு  அறிவுரைஞர் சீலா பாலகிருட்டிணன், பொதுத்துறை முதன்மைச் செயலர் யத்தீந்திரநாத்து சுவேன், தகவல் தொழில் நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர்  இராமச்சந்திரன், முதல்அமைச்சரின் தனிப்பிரிவின் சிறப்புப் பணி அலுவலர்  மரு.சந்தோசு பாபு, அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 நல்ல முயற்சி. இன்னாருக்குத்தெரிவிக்கப்பட்டுள்ளது அல்லது இன்னாருக்கு மாற்றப்பட்டுள்ளது என்ற தட்டிக்கழிப்பு முயற்சி இன்றிக் குறை களையும் நோக்கில் செயல்பட்டால் சிறப்பானதாக இருக்கும். பாராட்டுகள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக