eezham-genocide06

vaiko07

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில்

அமெரிக்கத் தீர்மான நிறைவேற்றத்தால்

படுகொலை செய்யப்பட்டது நீதி! – வைகோ

  “இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த சிங்களப் பேரினச்சார்பு அரசை அனைத்துலக நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய ஐ.நா-வின் மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களுக்கான நீதி சாகடிக்கப்பட்டு, அநீதிக்கு மகுடம் சூட்டப்பட்டு விட்டது. ஐ.நா-வின் வரலாற்றிலேயே ௨௦௧௫ (2015) அக்டோபர் ௧ (1) ஆம் நாள் களங்கத்தைச் சுமக்கும் கருப்பு நாளாகிவிட்டது.
  ௨௦௦௯ (2009) ஆம் ஆண்டில் கொலைகாரச் சிங்கள அரசுக்கு மனித உரிமை ஆணையத்தில் பாராட்டுத் தீர்மானம் கொண்டு வந்த இந்தியாவும், கியூபாவும் ௨௯ (29) நாடுகளின் ஆதரவோடு அந்த அநீதியான தீர்மானத்தை நிறைவேற்றின. தற்பொழுது இன்று (௧-௧௦-௨௦௧௫) நடைபெற்ற மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொலைபாதகச் சிங்கள அரசையே குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பாளியாக்கும் கொடுமையான தீர்மானத்தை அமெரிக்காவும், பிரிட்டனும், மாசிடோனியாவும், மாண்டிநீரோவும் முன்வைத்து, இந்தியா, பாகித்தான் போன்ற நாடுகளின் முழு உறுதுணையுடன் ஒருமனமாக நிறைவேற்றி விட்டன.
  கடந்த ஆண்டு மனித உரிமை ஆணையர் நியமித்த மார்ட்டி அட்டிசாரி குழு, இலங்கையில் ஈழத் தமிழர்கள் படுகொலையான எண்ணற்ற நிகழ்வுகளைப் பட்டியலிட்டு, உரிய நீதி உசாவல் (விசாரணை) வேண்டும் என்று விரிவான அறிக்கை தந்தது. அந்த மூவர் குழு இலங்கைக்குள் செல்வதற்கே சிங்கள அரசு விடவில்லை. பன்னாட்டு நீதி உசாவல் ஏற்படுத்தப்பட்டு, புலனாய்வு செய்யப்பட்டால் நடந்தது தமிழ் இனப் படுகொலை என்பது மெய்ப்பிக்கப்படும். ஆனால், இந்த இனப் படுகொலை நடத்துவதற்குச் சிங்கள அரசுக்கு உடந்தையாக ஆயுதங்கள் வழங்கிச் செயல்பட்ட இந்தியா முதலான நாடுகள் குற்றச்சாட்டுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே சிங்கள அரசை வரிந்து கட்டிக்கொண்டு தாங்கிப் பிடித்தன.
  சிரிய நாட்டில் நடக்கும் படுகொலைகளை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் விசாரிப்பதற்கு ஐ.நா.-வின் பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் பரிந்துரை செய்துள்ளார். இன்றைய உலகில் தமிழர்கள் துணையற்றவர்களாக வல்லாண்மை நாடுகளால் ஆக்கப்பட்டு விட்டனர். இன்று மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தன்மானத் தமிழர்கள் எவரும் ஏற்க மாட்டார்கள். துன்ப இருளில் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வெளிச்சத்தைத் தரச் சூளுரைத்துக் கடமையாற்றுமாறு தமிழ்க்குலத்தின் இளைய தலைமுறையை, மாணவர்களை, தரணிவாழ் தமிழர்களை வேண்டுகிறேன்! தடைகளையும் சூழ்ச்சி வலைகளையும் தகர்க்கும் உறுதியோடு போராடுவோம்!”

– வைகோ


– செய்தியாளர் இ.பு.ஞானப்பிரகாசன்
eezham03