புதன், 30 செப்டம்பர், 2015

பாரதிதாசன் பிறந்த நாள், 'தமிழ்க் கவிஞர் நாள்' - முதல்வர் செயலலிதா





பாரதிதாசன் பிறந்த நாள், 'தமிழ்க் கவிஞர் நாள்' என்று அரசு விழாவாகக் கொண்டாடப்படும்  
சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது 
உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் 
அம்மா இலக்கிய விருது 
 மொழிபெயர்ப்புப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு!
 - முதல்வர் செயலலிதா அறிவிப்பு


முதல்-அமைச்சர்  செயலலிதா நேற்று ( புரட்டாசி 12,2046 / செப்.29, 2015) சட்டசபையில் 110-ஆவது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார்.  அறிக்கை வழியாக அவர்,
"பாவேந்தர் பாரதிதாசனின் புகழைப் பரப்பிடும் வகையில் அவரின் 125-ஆவது பிறந்த நாளையொட்டி 125 கவிஞர்களைக் கொண்டு, இரண்டு நாள் கவியரங்கம் ஐந்து  இலட்சம் உரூபாய் செலவில் நடத்தப்படும். மேலும், இந்த ஆண்டு முதல் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள், 'தமிழ்க் கவிஞர் நாள்' என்ற பெயரில் அரசு விழாவாகக்  கொண்டாடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

தமிழ்க்கவிஞர்களுக்கும் தமிழன்பர்களுக்கும் பெரிதும்  மகிழ்ச்சி தரும் அறிவிப்பாகும்.

மேலும் தமிழ்ப்படைப்பாளிகள் மகிழத்தக்க வகையில் பின்வருமாறு அறிவித்தார்.

 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்'என்ற பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் தரமான பிறமொழி படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டு தோறும் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது வழங்கப்படும். இவ்விருது பெறுபவர்களுக்கு   நூறாயிரம் உரூபாய்ப் பண முடிப்பும் தகுதியுரையும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இலக்கணம், இலக்கியம், மொழியியல் துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்கள் மூன்று பேருக்கு ஆண்டு தோறும், சித்திரை(தமிழ்)ப் புத்தாண்டில் 'உலகத் தமிழ்ச் சங்க விருதுகள்' வழங்கப்படும். விருது பெறும் ஒவ்வொருவருக்கும்  நூறாயிரம் உரூபாய் பண முடிப்பும் தகுதியுரையும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


 பெண் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், மகளிர் இலக்கியங்களைப் படைக்கும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் "அம்மா இலக்கிய விருது" வழங்கப்படும் எனவும்  தமிழக முதல்வர்  செயலலிதா அறிவித்துள்ளார்.

 பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை யற்றிடும் காணீர்! - என்ற பாரதியாரின் அமுத மொழிக்கேற்ப, பெண் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், நடப்பாண்டு முதல் மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் 'அம்மா இலக்கிய விருது' என்ற புதிய விருது சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு நாளில் வழங்கப்படும். "அம்மா இலக்கிய விருது" பெறுபவருக்கு  நூறாயிரம் உரூபாய்ப் பண முடிப்பும், தகுதியுரையும் வழங்கப்படும்.

  உலகப் பொதுமறையாம் திருக்குறளைக் கொரிய மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதற்கென, முப்பத்தாறு  இலட்சம் உரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்தார். 

 மேலும், ஓரடியில் உலக மக்களுக்கேற்ற எளிய அற நெறிக் கருத்துக்களைக் கொண்ட தமிழ் மொழியின் அற நெறிக் கருவூலமான ஆத்திசூடியை சீனம், அரபு  ஆகிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதற்கெனப், பதினைந்து  இலட்சம்  உரூபாய் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

 தமிழுக்கு வளம் சேர்க்கும்   உலகளாவிய அறிவிப்புகளுக்காகத் தமிழ்நாட்டு முதலமைச்சரை அகரமுதல மின்னிதழ், தமிழ்ப்பாதுகாப்புக்கழகம்,  இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழகம், புதுவை தமிழ் அமைப்புகள்  பாராட்டுகின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக