vaiko05

26 அன்று  உண்ணா நோன்பு:

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கு

நீதி கிடைக்கத் திரண்டு வாருங்கள்!

 வைகோ வேண்டுகோள்!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
  ஆந்திர மாநிலம் சேசாசலம் வனப்பகுதியில் ஆந்திர மாநில வனத்துறை சிறப்புக் காவல்படையினரால் 20 தமிழர்கள் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுச், சுட்டுக்கொல்லப்பட்டு, அந்தச் சடலங்களைக் காட்டுக்குள் கொண்டுபோய் வீசி எறிந்து  கிடங்கில்  வைக்கப்பட்டிருந்த பழைய செம்மரக்கட்டைகளை எடுத்துப் பக்கத்தில் போட்டுவிட்டு, தமிழர்கள் கள்ளத்துப்பாக்கி  முதலான ஆயுதங்களோடு காவல் துறையினரைத் தாக்கியதாகவும், அந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அப்பட்டமான பொய்யான கட்டுக்கதையைச் சொன்னது.
மனித உரிமைப் போராளி  என்றி திபேன் தலைமையிலான அமைப்பினர் சேசாலம் பகுதிக்கே சென்று உண்மையைக் கண்டறிந்து, தேசிய மனித உரிமை ஆணையத்தில் மூன்று  சான்றுரைஞர்களின் வாக்கு மூலத்தைப் பதிவு செய்தனர். அந்த ஆணையமும்  ம.பு.க. / சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்துரைத்தது.
ஆனால், ஆந்திர அரசு, அம்மாநில உயர்நீதி மன்றத்தில்   இடைக்காலத் தடை வாங்கியது. தமிழக அரசு இந்த 20 தமிழர் படுகொலை வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையைத் துச்சமாக மதித்தது.
20 தமிழர்கள் படுகொலையில்  மத்தியப்புலனாய்புக் கழகத்தின்  விசாரணை மேற்கொள்ளவும், குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தவும், கடமை மறந்த தமிழக அரசைக் கடமையாற்றச் செய்யவும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உரிய  துயர்துடைப்புநிதி பெறவும், தமிழக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்  ஆவணி 09 / ஆகத்து 26  அன்று வள்ளுவர் கோட்டத்துக்கு அருகிலும்,  ஆவணி 22 / செப்டம்பர் 8  அன்று திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலும் மிகப்பெரிய உண்ணா நிலை அறப்போராட்டங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
  அண்டை மாநிலக் காவல் துறையோ, அண்டை மாநில அரசுகளோ, மத்திய அரசோ இனி எக்காலத்திலும் தமிழர்களுக்குத் தீங்கு விளைவிக்க முனையக்கூடாது என எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் இந்த அறப்போரில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்களையும், தமிழ் உணர்வாளர்களையும் அழைக்கிறேன்.
இவ்வாறு  வைகோ அதில் கூறியுள்ளார்.