maraimalaiadigal_mullaippaattuaaraaychiyurai_attai

தமிழைத் தூயதாகப் பேணல் ஒவ்வொருவரின் கடமையாம்!

 தொன்றுதொட்ட சிறப்பும் இலக்கண இலக்கிய வரம்புந், தனக்கெனப் பன்னூறாயிரஞ் சொற்களும் வாய்ந்து, இன்றுகாறும் வழக்கு வீழாது உயிரொடு உலாவிப் பன்னூறாயிரம் மக்கட்குப் பெரிது பயன்பட்டு வரும் நமது இனிய செந்தமிழ் மொழியை அயல்மொழிச் சொற்கள் விரவாமற் பாதுகாத்துத் தூயதாய் வழங்கி அதனை வளம்பெறச் செய்வது தமிழராயினார் ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாத கடமையாம். சில நூற்றாண்டுகளாய்த் தோன்றி இலக்கண இலக்கிய வரம்பில்லாது தமக்கெனச் சில சொற்களேயுடைய மொழிகளையும், உலக வழக்கிற்குச் சிறிதும் பயன்படாமல் இறந்துபட்ட மொழிகளையும் அவற்றிற்குரியாரும் அவற்றிற்கு உரியார் போற்றம்மை எண்ணிக் கொள்வாரும் அவற்றைத்தூயவாய் வழங்கவும் அவற்றை உயிர்ப்பிக்கவும் ஓவாது முயன்றுவர, எல்லா நலங்களும் ஒருங்குடைய நமதருமைச் செந்தமிழ் மொழியை நம்மனோர் பயிலாதும் காவாதுங் கைவிட்டிருத்தல் நிரம்பவும் இரங்கற்பாலதொன்றாம். இனியேனும் அவர் அங்ஙனம் மடிந்திராமைப் பொருட்டு, நம்மனோரிற் கற்றவராயிருப்போர் ஆரியம் ஆங்கிலம் முதலான பிற மொழிச் சொற்களைக் கலவாமற் றனித்தமிழ் பேசவும் எழுதவுங் கடைப்பிடியாய்ப் பழகிவரல் வேண்டும்.
-தமிழ்க்கடல் மறைமலையடிகள்: முல்லைப்பாட்டு
ஆராய்ச்சியுரை: பக்கம். 17