திங்கள், 13 ஜூலை, 2015

கணித்தமிழ் ஆர்வலரா? உங்களை உதயச்சந்திரன் இ.ஆ.ப. அழைக்கிறார்!



இணையவழியில் தமிழ் வளர்க்க ஆர்வம் உள்ளவரா?  

உங்களுக்குத் திரு த.உதயச்சந்திரன்  இ.ஆ.ப. அழைப்பு!
என்னவெல்லாமோ செய்யலாமே! உரியவர்கள் உறங்கிக்கிடக்கின்றனர் என எண்ணி உங்கள் கனவுகளைப் பூட்டி வைத்துள்ளீர்களா? அவற்றை நனவாக்க ஒரு நல் வாய்ப்பு!  உங்கள் கருத்தைச் செவிமடுத்துச் செயற்படுத்த ஓர் அலுவலர் வந்துவிட்டார்!  பின்னுள்ள அழைப்பின்படி நீங்கள் நேரில் பங்கேற்கலாம்! கணிணிவழி உரையாடிக் கருத்தைத் தெரிவிக்கலாம்! மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கலாம்! உங்களைப்போன்ற ஆர்வமுள்ள நண்பர்கள் கருத்துகளையும் தெரிவிக்கச் செய்யுங்கள். எல்லாம் ஒன்று சேரும் பொழுது இணையத் தமிழுக்கு விடிவு பிறக்கும்.
தவறாதீர்! மறவாதீர்! பதிவதற்கும் கருத்தைத் தெரிவிப்பதற்கும்!

அழைப்பவர்:
த. உதயச்சந்திரன், இ.ஆ.ப.,
நிதித்துறை செயலர் (செலவினம்)
இயக்குநர் (பொ), தமிழ் இணையக் கல்விக்கழகம்,
சென்னை, தமிழ்நாடு.


அழைக்கப்படுநர் :
கணித்தமிழ் ஆர்வலர் ஒவ்வொருவரும்
அன்புடையீர்,

      வணக்கம்.

   உலகெங்கும் வாழும் தமிழர், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தமிழர்தம் கலை, இலக்கியம், பண்பாட்டுக்கூறுகளை இணையவழி முன்னெடுத்துச் செல்வதிலும் தமிழில் கணியன்கள்(மென்பொருட்கள்) உருவாக்குவது முதலான கணித்தமிழ் வளர்ச்சியிலும் தமிழ் இணையக்கல்விக் கழகம் தொடர்ந்து தன் பங்களிப்பைச் செலுத்தி வருவதைத் தாங்கள் அறிவீர்கள்.

  உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களின், குறிப்பாக இளந் தலைமுறையினரின் தேவையை நிறைவு செய்யும் விதமாகவும் தகவல் நெடுஞ்சாலையில் கணித்தமிழை விரைந்து பயணிக்க வைக்கும் எதிர்காலத் திட்டங்களை வகுத்திடவும் தமிழ் இணையக் கல்விக்கழகம் எண்ணியுள்ளது.

  அதன் ஒரு பகுதியாக, எதிர்வரும் ஆகத்து 1 மற்றும் 2, 2015 ஆகிய நாள்களில் சென்னை, தமிழ் இணையக் கல்விக்கழக வளாகத்தில் ஓர் கலந்துரையாடல் நிகழ்வினை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள், பேராசிரியர்கள்,  கணிய(மென்பொருள்) நிறுவனங்கள், அரசுத்துறை அலுவலர்கள், எழுத்தாளர்கள், பிறநாட்டில் வாழும் கணித்தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்க இருக்கின்றார்கள்.


நிகழ்விடம்:              நாள்: ஆடி 16 &17, 2046 - ஆகத்து 1&2, 2015
தமிழ் இணையக் கல்விக்கழகம்,                   
காந்தி மண்டபம் சாலை,
(அரசு தகவல் தொகுப்பு விவர மையம் அருகில்,
அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அடுத்து)
 சென்னை – 600 025.
    கலந்துரையாடல் நிகழ்வில் கீழ்வரும் தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும்.

1.     எண்மியமாக்கம்
       -      நூல்கள் - மின்நூலகம்
       -      சுவடி, கல்வெட்டு, ஆவணங்கள், ஓவியங்களைஎண்மியமாக்குதல்
 2.     ஆராய்ச்சி
   -   இயற்கை மொழிச் செயற்பாடுகள்
   -   ஒளி/ஒலி உணரிகள், சொற்பிழைதிருத்தி
   -   தரவகம், சொல்லாய்வு, அகரமுதலி.
3.     இணையவழிகற்றல், கற்பித்தல்
       -      பல்வேறு நாடுகள் / பகுதிகளுக்கேற்ற பாடத்திட்டம்உருவாக்குதல்
       -      அலைபேசிக் கணிமை, குறுஞ்செயலி உள்ளடக்கம்
4.     திறவூற்று மென்பொருள் / களப்பணி
   -   கணித்தமிழ்ப் பேரவைகள், விக்கியூடகம்
   -   திறவூற்று மென்பொருள் கொள்கை

   எனவே இந்நிகழ்வில் தாங்கள் நேரில் அல்லது / இணையவழி (skype)யில் பங்கேற்கவேண்டும் என அன்புடன் விழைகிறேன்.

  தங்களுடைய கருத்துரையும், நல்வழிகாட்டுதலும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வளர்ச்சிப்பாதையில் ஓர் புதியமாற்றத்தை ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்.

கணித்தமிழ் வளர்ப்போம்!
காலத்தை வெல்வோம்!!

அன்புடன்,


த. உதயச்சந்திரன், இ.ஆ.ப.,

குறிப்பு :

1.   தங்களின் பங்கேற்பை 20.7.2015க்குள் tvaadmin@tamilvu.org எனும் மின்(னஞ்சல் முக)வரிக்கு உறுதிபடுத்த விழைகிறோம்.

2.  தொடர்பு கொள்ள
தொலைபேசி                       :    91 44 2220 1012 / 91-44-2230 1012
தொலைப்பதிவி                      :    91-44-2230 1016
மின்-அஞ்சல்                        :    tvaadmin@tamilvu.org
இணையவழி பங்கேற்பு   :    skype ID: tamilvu 


அன்புடன்,
இயக்குநர்
தமிழ் இணையக் கல்விக்கழகம்,
காந்தி மண்டபம் சாலை,
அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில்
சென்னை – 25.
தொ.பே: 2220 1012 / 13 
மின் முகவரி: tamilvu@yahoo.com



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக