புதன், 21 ஜனவரி, 2015

விற்பனைக்கு வந்த மஞ்சள் கிழங்குகள் – வைகை அனிசு


62manjal-turmeric 

தமிழர் திருநாளை முன்னிட்டு

விற்பனைக்கு வந்த மஞ்சள் கிழங்குகள்

  மங்களம் என்றாலே மஞ்சள் என்று சொல்லும் அளவுக்கு நம் வாழ்வில் முதன்மையான இடம் மஞ்சளுக்கு உண்டு. தெற்காசியாவைப் பிறப்பிடமாகக்கொண்ட மஞ்சளின் மருத்துவக் குணத்தையும், சிறப்புகளையும் நம்மைவிட மேற்குஆசிய நாடுகள் அறிந்து வைத்திருக்கின்றன. அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சள், வேம்புக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுவிட, போராடி, நாம் திரும்பப் பெற்றோம். குர்க்குமா அரொமெட்டிக்கா என்ற அறிவியல் பெயர் கொண்ட கத்தூரி மஞ்சள் இந்தியா முழுவதும் பரவலாகப் பயன்படுகிறது. இதனுடைய கிழங்கு, மருத்துவப் பயன்மிக்கது. குளியல்பொடிகள், அழகுப்பொருட்கள், என மட்டுமின்றி கத்தூரி மஞ்சள் தெம்பூட்டியாகவும் செயல்படுகிறது. இது உடல் சூட்டைக் கூட்டி உள்ளுறுப்புக்களின் செயலைத்தூண்டும். கத்தூரி மஞ்சளின் இலையை நலங்கு மாவுடன் சேர்த்துப் பயன்படுத்துவதால் தோல் பளபளப்பாகும். கத்தூரிமஞ்சள் மணம் மிகுந்தது. இவ்வளவு பெருமை வாய்ந்த மஞ்சள், கத்தூரி மஞ்சள் ஆகியன, பொங்கல் பண்டிகையை முன்னிட்டுக் கால்நடைகளுக்குச் சல்லிக்கட்டின்போது கட்டவும் பயன்படுகிறது.
  பொங்கல் இடும்போது மஞ்சள் கொத்து, காப்பு கட்டு, கரும்பு போன்றவற்றைப் பயன்படுத்தி வேளாண்மக்கள் தங்கள் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். தற்பொழுது மஞ்சள் பயிரிடப்படும் வேளாண்மை சுருங்கி – தேவதானப்பட்டியில் மஞ்சள் பயிரிடப்படாததால், வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வருவித்து, மஞ்சள் கிழங்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்பொழுது தேவதானப்பட்டிப் பகுதியில் மஞ்சள் கிழங்கு கொத்து உரூ.20 லிருந்து 30 உரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் வாங்கிச்செல்கின்றனர்.
vaigai anesu62



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக