58kezhuthi_fish

அயிரை மீன் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்வு

58vaigai aneesu
  தேனிமாவட்டத்தில் அயிரை மீன் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.இருப்பினும் மீன்விரும்புநர்கள் அம்மீன்களை விரும்பி வாங்கி உண்கிறார்கள்.
  தேவதானப்பட்டிப் பகுதிகளில் உள்ள ஆறுகள், ஓடைகள், கண்மாய்களில் நீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் இயற்கையாக அயிரை மீன், கெழுத்தி மீன் போன்ற மீன்கள் பெருகி உள்ளன. மற்ற மீன்கள் தண்ணீர் செல்லக்கூடிய திசையில் செல்லும் தன்மை உடையது. ஆனால் அயிரை மீன் மற்றும் கெளுத்தி மீன் நீரோட்டத்திற்கு எதிர்த்திசையில் வரும் தன்மை உடையன. இதனால் துண்டுகள், ஓலைக்கொட்டான்களைக் கொண்டு எதிர்திசையில் வரும் அயிரை மீன்களைப் பிடித்து விற்பனை செய்கின்றனர்.
  அயிரை மீன் நெஞ்சுச்சளி போக்கும் மருத்துவ குணம் மிகுந்தது. இதனால் இம்மீனை விரும்பி வாங்கி உண்கின்றனர். அயிரை மீன்கள் படி ஒன்று 600உரூபாய் முதல் 800உரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதே போல் கெளுத்தி மீன்கள் படி ஒன்று 200உரூபாயிலிருந்து 400உரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய மீன் என்பதால் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர்.