Sanskrit_Circular02
மீண்டும் தமிழுக்கு அவமதிப்பா எனக் கொதிக்கிறார்கள், தமிழ் அறிஞர்களும் கல்வியாளர்களும்! சமூக ஊடகங்களில் இந்தியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என மோடி அரசு உத்தரவிட்டு.. தமிழகமே எதிர்க்க.. அது நீக்கப்பட்டது. அந்தச் சூடு ஆறாதநிலையில், சமற்கிருத வாரம் கொண்டாட உத்தரவிட்டு உசுப்பிவிட்டிருக்கிறது, தில்லி.
நாடு முழுவதும் உள்ள மத்திய பள்ளிக்கல்வி வாரியப் (சி.பி.எசு.இ) பள்ளிகளில், வரும் ஆகசுட்டு 7-ஆம் நாள் முதல் 13-ஆம் நாள்வரை, ’சமற்கிருத வாரம் கொண்டாடுமாறு வாரியத்தின் இயக்குநர் சாதனா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சூன் 30-ஆம் நாளிடப்பட்ட அந்த சுற்றறிக்கையில், அப்படி என்னதான் இருக்கிறது?letterpad-cbse01
முதல் பத்தியிலேயே,’”எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி சமற்கிருதம். சமற்கிருத மொழியில் தொன்மையான அறிவு ஏராளமாக விரவிக்கிடக்கிறது; இந்தியாவும் சமற்கிருதமும் மிக நெருக்கமானது. மத்தியில் மொழிப் படைப்பாக்கத்தை ஊக்குவிக்கவும், முறையான சமற்கிருதக் கட்டமைப்பின் மூலமாக எல்லா மொழிகளைக் கற்பதற்கான ஆழமான பார்வையைப் பெற்று இலாபமடையவும் இந்தச் சமற்கிருத வாரமானது ஒரு வாய்ப்பு’’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகளுக்கிடையில் எனப் பல போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்த வழிகாட்டலும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் ஆதிசங்கராச்சார்யா, பகவத் கீதா- தி சாங் ஆஃப் தி லார்ட், முதுராட்சசா போன்ற சமற்கிருதத் திரைப்படங்களைத் திரையிடுவது, சமற்கிருத அறிஞர்களுடன் உரையாடல், சமற்கிருதத்தின் நடைமுறைப் பயன்பாடு (?) பற்றி ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகள் நடத்தப்படவேண்டும். மாணவர்களுக்கு சமற்கிருதம் பேசுவதை ஊக்குவிக்கும்வகையிலான நிகழ்வுகள் நடத்தவேண்டும்.
 sanskrit-nakkeeran01
6-8 மாணவர்களுக்கு சமற்கிருத சுலோக அந்த்யக்சரி போட்டிகளும், 9-12 மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டியும், இலகுபாசனம் எனும் 2 நிமிடப் பேச்சுப் போட்டியும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான ’கவிதாஇரசனா’ கவிதை படைக்கும் போட்டியும் நடத்தப்பட வேண்டும். மேல்நிலை மாணவர்களும் ஆசிரியர்களும் சமற்கிருதத்தையும் அரசியல்சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள (தமிழ் உள்பட்ட) மொழிகளையும் வெளிநாட்டு மொழிகளையும் இணைக்கும் ஆய்வுகளைச் செய்யத் தூண்டப்படவேண்டும்.
இப்படி பல அறிவுரைகள், உத்தரவுகளைச் சொல்லும் அந்த சுற்றறிக்கையானது, 15 ஆயிரம் சி.பி.எசு.இ. பள்ளிகள் தொடர்புடைய பிரச்சினை மட்டும் அல்ல; தமிழ் உள்பட்ட இந்தியத் துணைக்கண்டத்தின் மரபான மொழிகளுக்கு எதிரான தாக்குதல் என பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
வசுபாயி தலைமையிலான முந்தைய பா.ச.க. ஆட்சியின் போது இதைப்போல ஒரு திட்டம் முன்மொழியப்பட்டது. அதன் தொடர்ச்சிதான் இது என்கிறார்கள், கல்வியாளர்கள்.
அப்போது, ’கல்வித் துறையில் காவிமயத்துக்கு எதிரான இயக்கம்’ நடத்திய கல்வியாளர்களில் ஒருவரான பேராசிரியர் அ.மார்க்சு, பழைய சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசினார்.
sanskrit-nakkeeran02“சமற்கிருதத்தை தேவ பாசா என்றும் தமிழ் உள்பட்ட மற்ற மொழிகள் நீசபாசா என்றும் இந்துத்துவ சக்திகள் சொல்லிவந்தன. அந்தப் பொருளில்தான், இந்தச் சுற்றறிக்கையில், இந்தியாவில் உள்ள மொழிகள் எல்லாம் சமற்கிருதத்தில் இருந்துதான் தோன்றியது எனும் பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 1756-இல் சர் வில்லியம்   சோன்சு, சமற்கிருதம் ஓர் இந்தோ – ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று நிறுவினார். அதாவது, அது இந்திய மொழிகளைவிட சோதிக், செல்திக், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழி களுடன்தான் தொடர்புடையது என்பதை உறுதிசெய்தார். 1816- இல் எல்லீசும் 1856- இல் கால்டுவெல்லும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலான மொழிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை; இவை சமற்கிருதத்துடனோ மற்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளுடனோ தொடர்பு இல்லாதவை; அந்த வரிசையில் திராவிட மொழிக் குடும்பம் என்பதை நிறுவினார்கள். எனவே, இந்திய மண்ணுக்கு, திராவிட மொழிகளே அதிக நெருக்கம் வாய்ந்தவை. சமற்கிருதம் தாய் என்பது தமிழை அவமதிக்கும் செயல். வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சமற்கிருத வாரம் கொண்டாட இந்திய அரசு முயற்சிப்பது, அரசியல்சட்டப்படியும் தவறானதாகும்” என்று அழுத்தமாகச் சொல்கிறார், பேரா. அ.மார்க்சு.
ஆட்சித் தமிழறிஞரான இலக்குவனார் திருவள்ளுவனோ, “எந்த மொழியும் பொதுவாக உருவானது என்றுதானே சொல்வார்கள். ஆனால், சமற்கிருதமோ தமிழ், பிராகிருதம், பாலி ஆகிய மொழிகள் கலந்து உருவாக்கப்பட்டது. சமற்கிருதம் என்றாலே நன்றாக செய்யப் பட்டது என்றுதான் பொருள். அதற்கென தனியான எழுத்து வடிவமே இருந்ததில்லை. தமிழைப் பார்த்து பின்னர் அமைத்துக்கொண்டதுதான். வாசுபாயி ஆட்சியின்போதே, 2000- இல் சமற்கிருத ஆண்டு எனக் கொண்டாடினார்கள். கடும் எதிர்ப்புக்குப் பிறகு, அடக்கி வாசித்தார்கள். பாச.க. என்றுமே உண்மையைப் புதைக்கும் அல்லது திரிக்கும்.

எனவேதான், உலக மொழிகளின் தாய் சமற்கிருதம் என நச்சுக் கருத்தை விதைக்கிறது. இடையில் இந்தியை வளர்ப்பதாகச் சொல்லி, சமற்கிருதத்தை வளர்க்க மைய அரசு பல்வேறு செயல்களில் ஈடுபட்டது. இப்போது மீண்டும் நேரடியாகவே சமற்கிருதத்தைத் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள்.

ஏராளமான நிதியும் செலவிடப்படுகிறது. செம்மொழிகளில் சில உள்ளன; ஆனால், உயர்தனிச் செம்மொழி என்பது தமிழ் மட்டுமே எனப் பரிதிமாற்கலைஞர் போன்ற அறிஞர்கள் நிறுவி யிருக்கிறார்கள். தாமதமாகவேனும் முந்தைய காங். அரசு, செம்மொழிப் பட்டியலில் தமிழுக்கு முதல் இடம் தந்தது. எனவே, முதலில் தமிழ் வாரம்என இந்தியா முழுவதும் பா.ச.க. அரசு கொண்டாடட்டும்!என்று சீறலும் வருத்தமுமாக வெடிக்கிறார்.
- இரா.தமிழ்க்கனல்thamizhkanal.iraa01
cbse-sanskrit-nakkeeranattai01
நக்கீரன் 27/17 : நாள் சூலை 19-22, 2014 பக்கங்கள் 1 & 42

pirar-karuvuulam