இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு அழிக்கப்படும்

தமிழ்க் கலைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம்!

paraiisai-muzhakkam02
  இலங்கையில் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தேசிய இனத்தின் புலம்பெயர் கூறுகள் நாங்கள். சிங்கள பௌத்த இனவெறியர்களாலும் ஏகபோக அரசுகளாலும் சூறையாடப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் அவலங்கள் கூட வணிகமாக்கப்படும் அவமானகரமான சூழலில் நாங்கள் வாழ்கிறோம். அபகரிக்கப்படும் தமிழ் மண்ணில் உலகின் பல்தேசிய நிறுவனங்கள் தமது பேரரசை நிறுவிக்கொள்கின்றன. ஒருபுறத்தில் சிங்கள-பௌத்தக் குடியேற்றங்களும், மறுபுறத்தில் பல்தேசிய வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்பும் தமிழ் அடையாளத்தை அழித்து வருகின்றன.
  இவையெல்லாம் இனச்சுத்திகரிப்பைப் படம்போட்டுக் காட்டுகின்ன்றன. கிழக்கில் தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டுவிட்டனர். அங்கு நாளாந்தம் நடைபெறும் நிலப்பறிப்பு, தமிழ் பேசும் மக்களை அங்கிருந்து அகற்றிவிடுமோ என்ற அச்சத்தைக் குடிகொள்ள வைக்கிறது.
  இனச்சுத்திகரிப்பின் இன்னொரு வடிவம் கலை-பண்பாட்டுக் கூறுகளை ஆக்கிரமித்து அகற்றுவது. தமிழ்ப் பேசும் மக்களின் கலை வடிவங்களுக்கு நீண்ட இறுக்கமான வரலாற்றைக் காணலாம். மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து செழுமை பெற்ற இக்கலைபண்பாட்டு விழுமியங்கள் பல்தேசியப் பெரு நிறுவனங்களின் பணவலிமையால் அழிக்கப்படுகின்றன. தென்னிந்தியாவின் வன்முறை ஒழுகலாறும் அரைகுறைத் தமிழ்க் கலை வணிகமும் பல்தேசிய நிறுவனங்களின் துணையோடு கொடிகட்டிப் பறக்கின்றன.
  இந்த நிலையில் தமிழர்களின் மரபார்ந்த கலைகளைக் காப்பதும் அதனைப் புதிய வாழ்வின் அவலங்களை வெளிகொண்டுவந்து வளர்ப்பதும் எம் ஒவ்வொருவரதும் கடமை.
  இலங்கை அரசின் நட்பு நிறுவனமான ‘லைக்கா கத்தி’ என்ற இரத்தம் தெறிக்கும் வன்முறைக் கலையை தமிழர்கள் மத்தியில் பரப்ப முயற்சிப்பதை நாம் அறிந்துள்ளோம். இங்கு ‘லைக்கா’ என்பது ஒரு குறியீடே தவிர, டாட்டா, வேதாந்தா முதல் தமிழர்களில் வணிகப் பொறிக்குள் அமிழ்த்திச் சிதைக்கும் தொலைக்காட்சிகள் வரை எவரும் எமது மக்களின் நண்பர்கள் அல்லர்.
  இதற்கு முன்னுரை சொல்வது போன்று தென்னிந்தியப் பெருநிறுவனத்திரைக் கோமாளிகளின் துணையோடு ‘அலோ லெசர் மையத்தில்’ இலண்டனில் ‘லைக்கா’ ஆதரவோடு ‘கலை’ நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  கத்தியின் தமிழ் இரத்ததிற்கு அது முன்னுரையானால் நாமும் அதனைத் தமிழ்க் கலையை அறிமுகம் செய்வதற்கு முன்னுரையாகப் பயன்படுத்திக்கொள்வோம். நிகழ்ச்சி நடைபெறும் அதே நாளில்(26.07.2014) பிற்பகல் 5 மணிக்கு ‘அலோ லெசர்’ மையத்தின் முன்பாக தமிழர்களின் பறை முரசத்தை அறைந்து நாம் தமிழ்க் கலையின் முன்னுரையை இலண்டனில் எழுதவுள்ளோம். இதே நிகழ்வு, பல்தேசிய வணிகக் கோமாளிகளின் எதிர்ப்பு நிகழ்வாகவும் அமையும்.
  இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு அழிக்கப்படும் தமிழ்க் கலைகளையும் பாதுகாக்க பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை ‘அலோ லெசர்’ மையத்தின் முன்னால் ஆடி 10 2045, / 26.07.2014 அன்று கூடுமாறு அழைப்புவிடுக்கிறோம். எமது மண்ணின் பரம்ப‌ரைக் கலைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுப்பது கடமை என்று கருதும் சமூக உணர்வுள்ளவர்கள், சீரழிந்த கலைகளை ஊடறுத்து தமிழர்களின் தேசியக் கலைகள் முகிழ்த்தெழ வேண்டும் எனக் கருதுபவர்கள் எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்.
பறை : சுகந்திரத்தின் குரல் (PARAI – Voice Of Freedom)

paraiisai01இசைக் கலைஞர்/இசைக் குழு