வெள்ளி, 25 ஏப்ரல், 2014

7 பேரையும் காப்பு விடுப்பில் விடுதலை செய்ய வேண்டும் : இராமதாசு


 பேரறிவாளன் முதலான எழுவரையும் காப்புவிடுப்பில்(பரோல்) விடுமாறு  தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் அரசிற்கு முறையீடு அளித்து இருந்தோம். அதனைக்  கருதிப்பார்க்குமாறு தமிழ்நாடு  சிறைத்துறைத்தலைவரிடம் விண்ணப்பத்தை அனுப்பியது அரசு.  வழக்கு நிலுவையில் இருப்பதால் கருதிப் பார்க்க இயலவில்லை எனச் சிறைத்துறைத் தலைவர் தெரிவித்து இருந்தார். முன்கூட்டி விடுதலை செய்வதாக இருந்தால்தான் வழக்கு தடையாக இருக்கும். இப்பொழுது வழக்கின் தீர்ப்பிற்கு உட்பட்டு இவர்களைக் காப்பு விடுப்பில் அனுப்பலாம். எனவே, மாண்புமிகு முதல்வர் தன் அறிவிப்பை உறுதியுடன் நிறைவேற்றும் வகையில்  பேரறிவாளன் முதலான எழுவரையும் காப்பு விடுப்பில் அனுப்ப வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


பேரறிவாளன்  முதலான 7 பேரையும்  காப்பு விடுப்பில் விடுதலை செய்ய வேண்டும் :இராமதாசு


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் இராமதாசு,  பின்வருமாறு அறிக்கை விட்டுள்ளார்:-

 இராசீவு காந்தி கொலை வழக்கில் பொய்யாகச் சேர்க்கப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி  முதலான 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கினை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. 7 பேரின் விடுதலை தொடர்பாக நல்ல செய்தி வெளிவரும் என்று எதிர்பார்த்திருந்த தமிழர்கள் அனைவருக்கும் உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்திருக்கிறது.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை  ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த பிப்பிரவரி 18 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இவர்களை  விடுதலை செய்வது குறித்து குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 432, 433(ஏ) ஆகிய பிரிவுகளுக்கு  உட்பட்டு பொருத்தமான அரசு முடிவு செய்யலாம் என்று கூறியிருந்தது. மாநில அரசின் அதிகார வரம்புக்குள் உள்ள சட்டங்களின்படிதான் இவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்; அதுமட்டுமின்றி,  தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட ஒருவர் 14 ஆண்டு சிறைத் தண்டனை  துய்த்திருந்தால், அவர்களை விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 433(ஏ) பிரிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இவற்றின் அடிப்படையில் தமிழக அரசு சற்று பொறுப்புடனும், பக்குவமாகவும் செயல்பட்டிருந்தால், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி,இரவிச்சந்திரன்,  செயக்குமார், இராபட் பயாசு ஆகிய  ஏழு தமிழர்களும் எப்போதோ விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள். மாறாக, தமிழக அரசு பொறுப்பின்றி செயல்பட்டதால் தான் 7 தமிழர்களின் விடுதலை மிகவும் சிக்கலான ஒன்றாக மாறியிருக்கிறது.

7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கை அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள உச்சநீதிமன்றம், இதற்கான அரசியல் சட்ட அமர்வு 3 மாதங்களுக்குள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. உச்ச்நீதிமன்றத்திற்கு விரைவில் கோடை விடுமுறை விடப்படவிருக்கும் நிலையில், அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்படுவதற்கே இன்னும் பல மாதங்கள் ஆகும். அதன்பின் இந்த வழக்கை இழுத்தடிக்க மத்திய அரசு முயலும் என்பதால் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக சற்று அதிக காலம் ஆகலாம்.

பேரறிவாளன்  முதலான 7 பேரும் ஏற்கெனவே 23 ஆண்டுகளாகக் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் நிலையில், மேலும் பல மாதங்கள் அவர்கள் சிறையில் வாட வேண்டும் என்பதே மனித உரிமை மீறல் ஆகும். இத்தகைய சூழலில் 7 தமிழர்களுக்கும் உடனடியாக ஏதேனும்  துயர்துடைப்பு வழங்கப்பட வேண்டியது கட்டாயமாகும். இதற்காக இந்திய அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவைப் பயன்படுத்தி விடுவிப்பது  முதலான பல்வேறு வாய்ப்புகள் தமிழக அரசின் முன் உள்ளன.

இந்த விவகாரத்தின் தமிழக மக்களின் உணர்வுகளை தாம் மிகவும் மதிப்பதாக தமிழக முதலமைச்சர்   செயலலிதா பல்வேறு தருணங்களில் கூறியிருக்கிறார். அது உண்மையாக இருந்தால், குறைந்தபட்ச  மாற்றாக, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக இருட்டுச் சிறையில் வாடும் 7 தமிழர்களும் வெளியுலக  உரிமைக் காற்றை  நுகரும் வகையில் இவர்களை எவ்வளவு காலத்திற்குச் சிறை விடுப்பில்(பரோல்)அனுப்ப முடியுமோ அவ்வளவு காலத்திற்குச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக