இந்தி முதன்மையை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. ஆயினும் நடுவிட ஆட்சியாளர் அதைப் பொருட்படுத்தக் காணோம். ஏனைய தேசிய மொழிகளைப் புறக்கணித்து இந்திக்கு மட்டும் முதன்மையளிக்கும் செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
1. இந்தியறிவு இல்லையேல் அரசு ஊழியர்க்கு ஊதிய உயர்வு இல்லை என்றனர்.
2. இந்தியறிவு பெற்றால் ஊதியம் உயர்த்தப்படும் என்றனர்.
3. அரசுத்துறை ஆவண ஏடுகளில் தலைப்புக் குறிப்புக்கள் இந்தியில் எழுதப்பட வேண்டும் என்று ஆணை பிறந்துள்ளது.
4. பாராளுமன்றில் இந்தியும் ஆங்கிலமும் மட்டும் பயன்படுத்துவதற்குரிய வசதிகள் செய்யப்படுகின்றனவாம். ஏனைய தேசீய மொழிகட்கு தேசப் பாராளுமன்றில் இடம் கிடையாது.
5. திரைக்காட்சிகளில் செய்திக் கதிர் விளக்கம் இந்தியிலேயே கூறப்படுகின்றது.
6. உயர்நிலைக் கல்விக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் இந்தி மொழிவழியாகக் கற்பிக்கத்திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
7. இந்திமொழிவழியாகக் கற்பிக்கும் பல்கலைக் கழகம் ஒன்றும் தென்னாட்டில் தோன்றப் போகின்றதாம்.
தமிழ்ப் பெருமக்களே! இவற்றையெல்லாம் எண்ணி இந்தி முதன்மையைத் தடுக்க மடிதற்றி முந்துங்கள். இந்தி முதன்மை தமிழை அழிப்பது உறுதி. தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மையளிக்கத் தவறாதீர்கள். இந்தி முதன்மைக்கு இடமளிப்பது தமிழை அழிப்பதற்கு வசதி செய்தி கொடுப்பதாகும் என்பதை அறமின்.
எதனை இழந்தாலும் மீண்டும் பெறலாம்.
மொழியை இழந்தால் மீண்டும் பெறல் அரிது.
மொழியை இழந்தபின் வாழ்வது எற்றுக்கு?
-      தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், குறள்நெறி: ஆனி 02,1995 / 15.06.1964 பக்கம் 14