திங்கள், 30 செப்டம்பர், 2013

முடங்கவில்லை; முயல்கிறேன் : தன்னம்பிக்கை ஊட்டும் மாற்றுத்திறனாளி

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_81566920130930005635.jpg

முடங்கவில்லை; முயற்சி செய்கிறேன் : தன்னம்பிக்கை ஊட்டும் சேலம் மாற்றுத்திறனாளி
 
 
சேலம்:விபத்தில் பாதிக்கப்பட்டு, இரு கால்களும் செயல் இழந்ததாலும், தன்னை போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், தானே தயாரித்த, "தொட்டி ஆட்டோ'வில் வலம் வருகிறார், சேலம் மாற்றுத்திறனாளி இன்ஜினியர்.

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியாளர் சிவானந்தம். இடைப்பாடி, ஆரியப்பாளையம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட சிவானந்தம், 49. டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் படித்துள்ளார். தன்னுடைய, 25வது வயதில், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில், கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணியாற்றினார். பின், சவுதி அரேபியாவில், ராணுவ விமான நிலையத்தில் பணியாற்றினார்.கடந்த, 1994ம் ஆண்டு, கார் விபத்தில் சிக்கியதில், அவருடைய முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்குள்ள, ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், ஆறு மாதத்துக்கு பின், வீல் சேருடன் தாயகம் திரும்பினார். வயதான தாய், இரண்டு சகோதரன், இரண்டு சகோதரி, அனைவரும் தனியாக வசிக்கும் நிலையில், அவர்களை சிரமப்படுத்த வேண்டாம் என, ஓமலூர் இந்திரா நகரில், கையில் இருந்த பணத்தை கொண்டு, சொந்தமாக வீடு கட்டினார்.

கால்கள் இயங்காதபோதும், தனக்கான வசதியை, வீட்டிலேயே ஏற்படுத்திக் கொண்டார். சைக்கிள் பழுது பார்க்கும் கடை, ஜெராக்ஸ் கடை நடத்தி, அதன் மூலம் வருவாயை ஈட்டினார். அவருடன் பணியாற்றிய, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிலிப்டேனியல் என்பவர், 15 ஆண்டுகளுக்கு முன், அவரை பார்க்க ஓமலூர் வந்தார்.அவரது யோசனைப்படி, கைனெட்டிக் ஹோண்டாவின் முன்பகுதியை மட்டும் வைத்து, மெக்கானிக்குகளை கொண்டு, கைகளால் இயக்கும் வசதியுடன் கூடிய தொட்டி ஆட்டோவை தயாரித்தார்.வீல் சேரில் இருந்தபடியே, தொட்டி ஆட்டோவில் ஏறுவதற்கும், கையால் இயக்கி, கதவை திறந்து வெளியே வருவதற்கும், பெட்ரோல் டேங்க், கிக் ஸ்டாட்டர் என அனைத்து வசதியையும் உருவாக்கினார். அதிலேயே, ஓமலூரில் இருந்து பெங்களூரு, மதுரை, தென்காசி, தர்மபுரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகிறார்.அதே ஆட்டோவில் சென்று, தண்டுவட பாதிப்பால் முடங்கி கிடப்போருக்கு ஊக்கம் அளிக்கும் சேவையை செய்கிறார். தன்னார்வ தொண்டு அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் இறங்கி உள்ளார்.சிவானந்தம் கூறியதாவது:கார் விபத்து, என் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விட்டது. கால்கள் செயலழிந்த நிலையில், தவித்த எனக்கு ஆதரவாக இருப்பது இந்த ஆட்டோ மட்டுமே. ஆட்டோவில் இருந்து இறங்கும் போது, வீல்சேரில் இருந்தபடியே பல்டி அடித்த சம்பவங்களும் உண்டு. என்னை போல் உள்ளோரை இனம் கண்டு, அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதே என்னுடைய பணியாக உள்ளது, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக