புதன், 21 ஆகஸ்ட், 2013

பிரிட்டன் இளைஞரின் பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம்

பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_785296.jpg 

இலண்டன்: இரவு தூங்கி எழுந்ததும், முதல் நாள் என்ன நடந்தது என்ற விவரம் முழுவதும் மூளைப் பதிவிலிருந்து அழிந்து போகும் வினோத நோயால், பிரிட்டனை சேர்ந்த, இளைஞர் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவரது பெற்றோர், தங்களை ஒவ்வொரு நாளும் அறிமுகம் செய்து கொள்ளும் நிலையில் உள்ளனர்.

பிரிட்டனின், பிரிஸ்டல் பகுதியை சேர்ந்தவர், ரிக்கி டீன், 19. நிக்கி - கிரே தம்பதியரின் மகனான இவர், ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.ரிக்கியின் மூன்றாவது வயது வரை, அவரிடம் காணப்பட்ட ஞாபக மறதி குறைபாடு, பெற்றோருக்கு தெரியவில்லை. மூளைக்கு ஆக்சிஜன் செல்வதில் குறைபாடு இருந்ததால், ரிக்கியின் மூளையில், நிகழ்வுகள் பதிவாவது மெல்ல பாதிக்கப்பட்டது. ஏழாவது வயதில், அதிகப்படியான நிகழ்வுகளை, ரிக்கி மறந்து போவதைக் கண்டு, பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ரிக்கியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரின் மூளைக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்; அதற்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.பல ஆண்டுகள் சிகிச்சை அளித்த பின்னரும், ரிக்கியின் மூளை செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக, நாளுக்கு நாள், அவரின் ஞாபக சக்தி குறைந்து கொண்டே சென்றது.

நாளடைவில், அவரின் மூளையில், நிகழ்வுகளை பதிவு செய்யும் திறன், மோசமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ரிக்கி தன் நண்பர்கள், உறவினர்கள் மட்டுமின்றி, தன் பெற்றோரையும் மறந்துவிட்டார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதற்கான மாற்று வழியை தேடினர்.ரிக்கிக்கு, "ஐபோன்' வாங்கிக் கொடுத்து, அதில் நண்பர்கள், ஆசிரியர்கள், அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோரின் புகைப்படங்களை பதிய செய்து, அதன் மூலம், அனைவரையும் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்தனர்.சில நாட்களில், இரவு தூங்கி எழுந்ததும், முதல் நாள் என்ன நடந்தது என்பதையே ரிக்கி மறந்து போனார். பல் துலக்குவது, குளிப்பது போன்ற அன்றாட வேலைகளும் கூட அவருக்கு கவனத்தில் இல்லை. இது போன்ற தினசரி நடவடிக்கைகளுக்கும், ரிக்கி, தன் ஐபோனின் உதவியையே நாடுகிறார்.தற்போது, 19 வயதான ரிக்கி, இவ்வளவு பெரிய குறைபாட்டையும் பொருட்படுத்தாமல், தோட்டக்கலை மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பை படித்து வருகிறார்.

இது குறித்து ரிக்கி கூறியதாவது :நேற்று நடந்த விஷயங்களையோ அல்லது நாளை என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தையோ என்னால், நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. மறதி, எனக்கு பல வகைகளில் நன்மை அளிக்கிறது. இதனால் யாரிடமும் நான் பகைத்துக் கொள்ளும் சூழல் ஏற்படுவதில்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன். சாதாரண மனிதர்களைப் போல், பழைய நினைவுகளால் கவலைப்படுவதோ, நாளை பற்றிய திட்டமிடுதலால் ஏற்படும் மன உளைச்சலோ எனக்கு கிடையாது. இந்த நோயை நான் சாபமாக கருதவில்லை; வரமாக நினைக்கிறேன்.இவ்வாறு ரிக்கி கூறினார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக