புதன், 28 ஆகஸ்ட், 2013

பசியைப் போக்கும் மணிமேகலை- சோனியா : கருணாநிதி



நுணலும் தன் வாயால் கெடும் என்னும் பழமொழிக்கு மாறாகக் கலைஞரும் தன் வாயால்  கெடுவார் என்று புதுமொழி வந்துவிட்டது. அவரின் இன அழிப்பு உடந்தைகளை மறக்க எண்ணினாலும் மறக்கக்கூடாது என்பதற்காகவே இம்மாதிரி எழுதி்யும் பேசியும் வருகிறார்.

அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள்
 
என்னும் சிறப்பிற்குரிய மாதவ மணிமேகலையைப் போன்று          எத்தனையோ மணிமேகலையும்  சேர்த்த உருவமாகப் பன்னூறாயிரம் படுகொலைக்குக் காரணமானவரைப் பாராட்டுகிறார் என்றால் இவர் எத்தகைய இரங்கத்தக்க நிலையில் உள்ளார் எனப் புரிந்து கொள்ளலாம். எனவே, இவரைத் தாங்கி நிற்போர் இனியேனும்  இவரைப் புறந் தள்ள வேண்டும். வரலாற்றைத் திரிப்பது தன் குடும்பத்தாரைக் காப்பாற்றத்தான் என்பது இக்காலத்தாரால் பதியப் பெறும். வருங்காலத்தில் வரலாறு  இனக்கொலையாளிகளையும் உடந்தையாளர்களையும் பழித்தும் இழித்தும் கூறும். எனவே, இனியேனும் இத்தகைய புன்மொழிகளைப்பொன்மொழிகளாகக்கருதி உரைக்க  வேண்டா.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

பசியை ப் போக்கும் மணிமேகலையாக ச் சோனியா திகழ்கிறார்: கருணாநிதி


சென்னை : "பசியை ப் போக்கும் வகையில், உணவு ப் பாதுகாப்பு ச் சட்டத்தை நிறைவேற்றியதால், மணிமேகலையாக, காங்கிரஸ் தலைவர் சோனியா திகழ்கிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை சார்பில், திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின், 115வது பிறந்த தின விழா சென்னையில் நேற்று நடந்தது. வழுவூர் ரவி வரவேற்றார். நாதஸ்வர கலைஞர் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, நாதஸ்வர கலைஞர் கீவளுர் கணேசன், தவில் கலைஞர் இலுப்பூர் நல்லகுமார் ஆகியோருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி பரிசு வழங்கி பேசியதாவது:உணவு பாதுகாப்பு மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நாடு சுதந்திரம் பெற்று, 60 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் சுதந்திரம் பெற்றது போன்ற உணர்வும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. உணவு உரிமை கிடைத்துள்ளது. சோனியா, தன் மனதில் தோன்றிய பெரிய காரியத்தை செய்து முடித்துள்ளார்.நாடு முழுவதும், பலர், ஒருவேளை உணவு இல்லாமல் உள்ளனர். அவர்களின் பசியை போக்க வேண்டுமானால், எத்தனையோ மணிமேகலை தேவைப்படுவர். அத்தனை மணிமேகலைகளையும் சேர்த்து ஒரு மணிமேகலையாக சோனியா, இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலையை திறந்த போது, என் கை, கால்கள் நடுங்கி, பேச முடியாத நிலைக்கு திக்குமுக்கு அடைந்தேன். அதேபோன்ற உணர்வு தான் சோனியாவுக்கும் ஏற்பட்டிருக்கும்.அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, என் நெஞ்சு பதைபதைத்தது. அவர் உடல் நலம் தேறி வரவேண்டும் என நினைத்தேன். உடல் நலம் பெற்று விட்டார். அவருக்கு எனது பாராட்டுக்கள்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.
சோனியாவுக்கு கருணாநிதி பாராட்டு:

""உணவு பாதுகாப்பு மசோதாவை, கொண்டு வர காரணமாக இருந்த, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை அறிவாலயத்தில், நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:நாடு சுதந்திரம் பெற்று, 66 ஆண்டுகளுக்கு பின், உணவு உரிமைக்கான சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஏழை, எளியோர் மகிழ்ச்சி பெருக்கோடு, இதை வரவேற்பர் என, நம்புகிறேன்.தி.மு.க., சார்பிலும், மற்ற கட்சிகளின் சார்பிலும், கொடுத்த முக்கியமான திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருப்பது திருப்தி அளிக்கிறது.இந்தச் சட்டத்திலே இன்னும் செய்ய வேண்டிய, ஒரு சில திருத்தங்கள் இருக்கின்றன. காலப்போக்கில் அவ்வப்போது ஏற்படுகின்ற அனுபவங்களின் அடிப்படையில், தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என, எதிர்பார்க்கிறேன்.இதுபோன்ற பிரச்னைகளில், வறட்டு பிடிவாதம் எதுவும் காட்டாமல், நல்லதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் இருக்க வேண்டும். முக்கிய எதிர்க்கட்சிகள், தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து விட்டு, அதே நேரத்தில் மசோதாவை வரவேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சியாகச் செயல்படலாம்; ஆனால், எதிரிக் கட்சியாக இருப்பது நல்லது அல்ல.

இது தான் பார்லிமென்டில் நடந்த விவாதத்திலிருந்து, என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.சுமூகமான முறையில், இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியிருப்பதற்காகவும், தி.மு.க., தந்த திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருப்பதற்காகவும், இந்தியாவில் உள்ள ஏழை, எளிய, சாதாரண, சாமான்ய, அடித்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், அதற்கு ஓட்டு அளித்தவர்களுக்கும், இந்த மசோதாவை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த சோனியாவுக்கும், பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.

1 கருத்து:

  1. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையைத்
    திறக்கும்போது கலைஞருக்கு கை கால் நடுக்கம்
    ஏன் ஏற்படவேண்டும்?
    திருவள்ளுவர் அஞ்சத்தக்கவரா?

    சோனியா காந்திக்கு உடல் நலமில்லை எனில்
    மருத்துவரிடம் செல்வதுதான் அறிவுடைமையாகும்.
    சோனியா காந்திக்கு உரிமையான சொத்துகளையும்
    பொருள்களையும் விற்று இந்தியாவில் உள்ள
    ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கி பசிப் பிணியைத்
    தீர்த்தவர் அல்லவா சோனியா காந்தி?

    இன்னும் எத்தனை நாள்கள் நாடகப் பாணி உருக்கம்!
    தம் சாதிக்காரர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனி
    வாழும் நாள்களைப் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்வதே
    அவர் நோக்கமாகஅமையட்டும்!

    தமிழினம் இனி ஏமாறாது!

    பதிலளிநீக்கு