ஞாயிறு, 9 ஜூன், 2013

உரத்த சிந்தனை: கரை சேருமா கச்சத்தீவு? க. இராமையா

உரத்த சிந்தனை: கரை சேருமா கச்சத்தீவு?  
க. இராமையா
தமிழக அரசியலில், இன்று கொதித்துக் கொண்டிருக்கும் பெரிய பிரச்னை, கச்சத்தீவு பற்றியது. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழர்களின் உயிர்களை காவு வாங்கியும், பசியடங்கா காலனின் கொடுமைக்கு காரணமான கச்சத்தீவின் பிரச்னைக்கு, அடிப்படை என்ன? தங்கத் தட்டில் வைத்து, கச்சத்தீவை தாரை வார்த்தது எப்படி சாத்தியமாயிற்று?

தமிழகத்திற்கும், இலங்கைக்கும் நடுவே, தமிழகத்தின் தென்பகுதியில், ராமேஸ்வரத்திற்கு அருகில், ஒரு பொட்டு போல, கச்சத்தீவு உள்ளது. இரண்டுக்கும் இடையே உள்ள தூரம், 16 கி.மீ., தீவின் பரப்பளவு, 285 ஏக்கர். 20ம் நூற்றாண்டில், ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர், அங்கு அந்தோணியர் தேவாலயத்தை அமைத்தார். இன்றும், அத்தீவில் இருக்கும் ஒரே கட்டடம் அதுதான்.இந்தியாவின் தென்கோடி ராமேஸ்வரமும், அதை ஒட்டிய கடல் பகுதிகளும், சிறு தீவுகளும், இந்தியா சுதந்திரம் பெற்ற, 1947ம் ஆண்டு வரை, பிரிட்டிஷாரின் நேரடி நிர்வாகப் பகுதியாக இல்லாமல், சேதுபதி மன்னர்கள் ஆண்டு வந்த, ராமநாதபுரம் சமஸ்தானத்திடமே இருந்தன.சுதந்திரத்துக்குப் பின், இந்தியாவிலிருந்த மற்ற சமஸ்தானங்களைப் போல், ராமநாதபுரம் சமஸ்தானம், சட்ட பூர்வமாக இந்தியாவுடன் இணைந்தது. அதுவரை கச்சத்தீவு, ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட, சேதுபதி மன்னர்களின் பரம்பரை சொத்து என்பதை நிரூபிக்க, ஏராளமான சான்றுகள் உள்ளன. அவை இன்றும், மதுரையிலுள்ள ஆவண காப்பகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம் மன்னருக்கும், அன்றைய இந்திய (மத்திய) அரசின் உள்துறை செயலருக்கும் இடையே, 1913ல் குத்தகைப் பத்திரம் ஒன்று கையெழுத்தாகியது. அந்தப் பத்திரத்தின் இறுதியில், சமஸ்தானத்தில் சங்கு கிடைக்கும் பட்டியல் ஒன்று தரப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில், கச்சத்தீவின் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது.இதன் மூலம், ராமநாதபுரம் சமஸ்தானத்தின் சொத்தாக, கச்சத்தீவு இருந்தது என்பதும், அதை பிரிட்டிஷ் அரசு அங்கீகரித்துள்ளது என்பதும், தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த, 1921 அக்., 21ம் தேதி, இலங்கைத் தலைநகராகிய கொழும்பில், மீன் பிடி எல்லையை வகுக்க மாநாடு ஒன்று நடந்தது. இலங்கையின் சார்பாக கலந்து கொண்ட, ஹார்ஸ்பர்க் என்ற அதிகாரி, கச்சத்தீவுக்கு அப்பால், 3.45 மைல் (3 கடல் மைல்) வரை, மேற்கே உள்ள கடல் பகுதியும் உள்ளடங்கும் வகையில், இலங்கையின் எல்லை வகுக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தினார்.
இந்திய அரசுக் குழுவினர், கச்சத்தீவு தனக்கு சொந்தம் என்று, ராமநாதபுரம் மன்னர் கூறுவதை வெளியிட்டு, வரைபடத்தையும் காட்டினர்.நெருக்கடியைத் தவிர்க்க, இலங்கையையும், இந்தியாவையும் பிரிக்கும் எல்லைக் கோட்டை, கச்சத்தீவுக்கு மேற்கே, 3.45 மைல் தொலைவிலேயே தற்காலிகமாக வரையறுத்துக் கொள்ளலாம் என, உடன்பாடு செய்து, இந்திய குழு அறிக்கை ஒன்றை, இந்திய அரசுக்கு அனுப்பியது.பழைய ஆவண விவரங்களையும், பிரிட்டிஷ் அரசின் நடவடிக்கைகளையும் பார்க்கும் போது, பிரிட்டிஷார் ஒரு போதும் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்கவில்லை என்பதும், அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டனர் என்பதும், தெளிவாகத் தெரிகிறது.

கடந்த, 1956க்கு பின், இந்திய அரசு, தன் கடல் ஆதிக்க எல்லைக் கோட்டை, 3 கடல் மைல்களிலிருந்து (ஒரு கடல் மைல் என்பது, 1.15 மைல் அல்லது 1.863 கி.மீ.,) 6 கடல் மைல்களாக விரிவுபடுத்தியது. இதே போன்ற போட்டி அறிவிப்புகளை, இலங்கை அரசும் வெளியிட, பிரச்னை வலுவடைந்தது.கடந்த, 1973ல், அன்றைய பிரதமர் இந்திரா, இலங்கை சென்றார். பின், இரு நாடு அதிகாரிகளும் கூடிப் பேசினர். 1974ல், இலங்கை பிரதமர், சிரிமாவோ பண்டாரநாயகா, இந்தியா வந்தார்.அண்டை நாடுகளுடன் சமாதான சகவாழ்வு என்ற இந்தியாவின் கொள்கை, ஒரு வகையில் நமக்கு சொந்தமான கச்சத்தீவு கைமாறக் காரணமாக இருந்தது. 1974ல், இரு நாடுகளும் செய்து கொண்ட
ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின், ஐந்தாவது ஷரத்து, இந்திய தமிழக மீனவர்கள், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கவும், கச்சத்தீவில் ஓய்வெடுக்கவும், மீன் பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளவும் வழி வகுத்திருந்தது.முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, 2008ல், அ.தி.மு.க., பொதுச் செயலர் என்ற முறையில், கச்சத்தீவை மீட்க வழக்கொன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதியும், 2013ல், அதேபோல் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.இந்த வழக்கின் சாராம்சம், இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது தவறு என்பது தான். இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கும், ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை மீட்டெடுக்கவும், இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா?
உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கொன்றில், 1960 மார்ச், 14ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு விடை சொல்கிறது.

இந்தியா, 1947ல் சுதந்திர அடைந்த போது, மேற்கு வங்க மாநிலம் இந்தியாவுடன் இருக்க, கிழக்கு வங்க மாநிலம், கிழக்கு பாகிஸ்தானாக மாறியது. பின், இந்த கிழக்கு பாகிஸ்தான், வங்க தேசமாக தனி நாடானது."பேர்பாரி' என்ற நிலப்பரப்பு சம்பந்தமாக, இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே ஆரம்பம் முதல், சர்ச்சை இருந்து வந்தது. பேர்பாரி என்ற நிலப்பகுதி, மேற்கு வங்கத்தின் நிர்வாகத்தில் தான் இருந்தது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருந்த போதும், கிழக்கு பாகிஸ்தானாக மாறிய, கிழக்கு வங்கத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது என்று, பாகிஸ்தான் பிடிவாதமாக வாதாடியது.அரசமரத்து நாட்டாமை பாணியில், உனக்கு பாதி எனக்கு பாதி என்று முடிவானது.இது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, மத்திய அரசின் சார்பில், இந்திய நிலப்பரப்பு பகுதிகள் ஏதும் பாகிஸ்தானுக்கு வழங்கப்படவில்லை; சர்ச்சைக்குள்ளாயிருந்த எல்லைப்பகுதி தான் வரையறுக்கப்பட்டன என்று, வாதிடப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை ஆராய்ந்த நீதிமன்றம், அந்த ஒப்பந்தம், இந்தியாவின் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கும் ஒப்பந்தமே என்று முடிவு செய்தது.இப்படி ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க, அரசுக்கு உரிமை உள்ளதா என்று ஆராய்ந்த போது, இவ்வாறு விட்டுக் கொடுப்பதற்கு தேவையான திருத்தங்களை அரசியல் அமைப்பு சட்டத்தில் செய்ய வேண்டும் என்றும், அவ்விதம் செய்யாத பட்சத்தில், இந்தியாவின் நிலப்பகுதிகளை வேறு நாட்டோடு ஒப்பந்தம் செய்து, அதை விட்டுக் கொடுக்கும் உரிமை அரசுக்கு இல்லை என்றும், ஒரு அதிமுக்கிய தீர்ப்பை வழங்கியது. அதன்படி, பேர்பாரி நிலப்பரப்பு முழுவதும், இந்தியாவுடன் இணைந்தது.

உச்ச நீதிமன்ற, எட்டு நீதிபதிகள் கூடி வழங்கிய இந்த தீர்ப்பு வந்த, 14 ஆண்டுகள் கழித்து, கச்சத்தீவு ஒப்பந்தம் இலங்கை அரசோடு போடப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது போலவே, கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் பின்னேற்பு செய்யப்பட வேண்டும் என்று, கச்சத்தீவு ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டு உள்ளது.ஆனால், கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக, அரசியல் அமைப்பு சட்டத்தில் எந்த ஒரு திருத்தமும் இன்று வரை செய்யப்படவில்லை. எந்த திருத்தமும் செய்யப்படாத நிலையில், இந்தியா - இலங்கையோடு, 1974ல் செய்து கொண்ட ஒப்பந்தமும், அதன்பின் தொடர்ச்சியாக, 1976ல் செய்து கொண்ட ஒப்பந்தமும் சட்டபூர்வமானதல்ல. கச்சத்தீவு ஒப்பந்தப்படி, தமிழக மீனவர்களுக்கு உண்டான மீன் பிடித்தல், வலை உலர்த்தல் ஆகிய உரிமைகளை வழங்காத இலங்கையுடன், இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தம் எப்படி செல்லுபடியாகும்?

இப்போது, மத்திய அரசு என்ன நிலை எடுக்கப் போகிறது என்பது தான் சஸ்பென்ஸ். இனப்படுகொலை நடத்தி, லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ஒரு அரக்கனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் மத்திய அரசு, கச்சத்தீவு பிரச்னை முடிந்து போன விவகாரம் என்று, இலங்கைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில், பதில் சத்தியபிரமாணம் தாக்கல் செய்யுமா, உச்ச நீதிமன்ற எட்டு நீதிபதிகளின் அமைப்பான, அரசியல் அமர்வு வழங்கிய அதிமுக்கிய தீர்ப்பை ஒப்புக்கொள்ளுமா அல்லது உதாசீனம் செய்யுமா?
இ-மெயில்:karuramiah70@yahoo.in

க. இராமையா சமூக ஆர்வலர்

1 கருத்து: