சனி, 4 மே, 2013

மத்தியப் பணியாளர் தேர்வு - கோவை மாணவர்கள் ஐந்து பேர் வெற்றி

வெளியானது  மத்தியப் பணியார் தேர்வு முடிவு கோவை மாணவர்கள் ஐந்து பேர் வெற்றி
கோவை:சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், கோவை இலவச உயர்கல்வி மையத்தில் பயிற்சி பெற்ற ஐந்து பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கோவை நஞ்சப்பா ரோட்டில் அமைந்துள்ளது கோவை உயர்கல்வி மையம். மாநகராட்சி மற்றும் அரசு கலை கல்லூரி சார்பில் நடத்தப்படும் இம்மையத்தில், அரசு கலை கல்லூரி பேராசிரியர் கனகராஜ் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இம்மையத்தில் பயிற்சி பெற்ற திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணகுமார்(460 ரேங்க்), அபிநயநிஷாந்தினி(717) டில்லியை சேர்ந்த மனோஜ்(771), சென்னையை சேர்ந்த சுரேஷ்குமார்(343), ஈரோட்டை சேர்ந்த கார்த்திகேயன் (789), உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
* வெற்றியின் ரகசியம்!சாதனை மாணவ,மாணவியர் கூறியதாவது:தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உயர்கல்வி மையத்தில், பேராசிரியர் கனகராஜ் அளித்த பயிற்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், கடினமாக உழைத்தோம். தினமும் 10 மணி நேரம் வரை படிப்பதை வழக்கமாக கொண்டோம். "டிவி', "சினிமா' பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொண்டோம். தினமும் செய்தி சேனல்கள் மற்றும் நாளிதழ்கள் படிப்பதை வழக்கமாக்கினோம். பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு பக்கபலமாக அமைந்தது. கஷ்டப்பட்டு படிப்பதை விட, இஷ்டப்பட்டு படிக்க வேண்டும். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சி கொண்டு செயல்பட்டால் சிவில் சர்வீசஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
கோவை உயர்கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கனகராஜ் கூறுகையில், ""சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோருக்கு, இம்மையத்தில் இலவச பயிற்சி அளித்து வருகிறோம். ஆரம்ப தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவ்வாண்டு முதல், நேர்காணல் பயிற்சியை, தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மற்றும் டில்லி உள்ளிட்ட பகுதிகளிலும் வழங்குகிறோம். கோவை மாநகராட்சிக்கும், அரசு கலை கல்லூரிக்கும், பயிற்சி பெறும் மாணவர்கள் சார்பில் நன்றி,'' என்றார்.
"விருப்பத்துடன் படித்ததால்ஐ.ஏ.எஸ்.,தேர்வில் சாதிக்க முடிந்தது'
மதுரை:""சுமையாக கருதாமல், விருப்பமுடன் படித்ததால் ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதிக்க முடிந்தது,'' என, அகில இந்திய அளவில், 7வது இடத்தில் வெற்றி பெற்ற மதுரை டாக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார்.மதுரை மகாத்மாகாந்திநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பாங்க் ஆப் இந்தியா மேலாளர் தங்கராஜ் குணாளன். மனைவி வசந்தி. இவர்களது மகன் பிரபுசங்கர், 29. இவர், டி.வி.எஸ்.,லட்சுமி மெட்ரிக் பள்ளியில், 1 முதல், 12ம் வகுப்பு வரை படித்தார். 2000ல் பிளஸ் 2 தேர்வில், 1157 மதிப்பெண்கள் பெற்றார்.பின், மதுரை மருத்துவக்கல்லூரியில், 2005ல் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்றார். சண்டிகர் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்., நிறுவனத்தில், எம்.டி., பட்டம் பெற்றார். பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சங்க தலைவராக திகழ்ந்தார்.தற்போது, சென்னை செட்டிநாடு மருத்துவ கல்லூரியில், உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். இவருக்கும், டாக்டர் நவீனா என்பவருக்கும், கடந்தாண்டு திருமணம் நடந்தது. நவீனா, நெல்லை மருத்துவ கல்லூரியில் எம்.எஸ்., படிக்கிறார்.இரண்டாவது முறையாக, ஐ.ஏ.எஸ்., தேர்வை எழுதிய பிரபுசங்கர், அகில இந்திய அளவில், 7வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பிரபுசங்கர் கூறியதாவது:சிறிய வயதிலிருந்து, ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என, ஆசை இருந்தது. கடந்த முறை, தேர்வு எழுதி வெற்றி பெற முடியவில்லை. இந்தாண்டு புவியியல், வரலாறு பாடங்களை தேர்வு செய்து படித்தேன். டிப்பதை சுமையாக கருதாமல், விருப்பத்துடன் படித்ததால், சாதிக்க முடிந்தது.சென்னை "சத்யா கோச்சிங்' சென்டரில் சர்ந்தேன். பணி காரணமாக தொடர்ந்து செல்ல முடியவில்லை. தினமும், "தினமலர்' நாளிதழ் படித்து பொது அறிவை வளர்த்து கொண்டேன். ஆர்வம் இருந்தால் சாதிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றத்தை கொண்டு வருவேன்* முதலிடம் பெற்ற அருண் பேட்டி
சென்னை:""மக்கள் மனதில் இடம் பெறும் வகையில், புதிய மாற்றங்கள் கொண்டு வருவேன்,'' என, யு.பி.எஸ்.சி., தேர்வில், தமிழக அளவில் முதலிடம் பெற்ற அருண் கூறினார்.
தேசிய அளவில், ஆறாம் இடமும், தமிழக அளவில், முதலிடமும் பெற்று, ஐ.ஏ.எஸ்., பணிக்கு தேர்வு பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த அருண் தம்புராஜ் கூறியதாவது:சொந்த ஊர் மதுரை; வளர்ந்தது சென்னை. மயிலாப்பூரில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளி படிப்பை முடித்தேன். பிளஸ் 2வில், நல்ல மதிப்பெண் எடுத்ததால், திருச்சி மருத்துவ கல்லூரியில படிக்க இடம் கிடைத்தது. திருச்சி மருத்துவ கல்லூரியிலிருந்து, சென்னை மருத்துவ கல்லூரிக்கு மாற்றலாகி வந்தேன். சென்னையில் தான் மருத்துவ படிப்பை முடித்தேன்.அப்பா, காவல் துறையில் பணிபுரிபவர் என்பதால், மக்களுக்கான சேவை செய்து குறித்து, எப்போது வீட்டில் பேசி கொண்டே இருப்பர். அப்பாவின் பேச்சு, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அதிகப்படுத்தியது. மருத்துவ படிப்பு முடிந்த உடன், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன்; ஐ.பி.எஸ்., பணியில் தான் இடம் கிடைத்தது. இன்றும், ஐ.பி.எஸ்., தேர்வு தொடர்பான வழக்கு கோட்டில் உள்ளது.நன்றாக தேர்வு எழுதியும், ஐ.பி.எஸ்., பணியில் தான் இடம் கிடைத்ததால், இரண்டு ஆண்டுகளாக, ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதவில்லை. நண்பர் ரவீந்திரன் அறிவுறுத்தலின் பேரில் தான், மறுபடியும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். ஆனால், இந்த முறை நானே எதிர்பார்க்காத வகையில், முதலிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பெற்றோரே, என் வெற்றிக்கு காரணம். மக்கள் மனதில் இடம் பெறும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டு வருவேன்.இவ்வாறு, அருண் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக