வியாழன், 4 ஏப்ரல், 2013

வறட்சியை ப் பார்வையிட்ட அமைச்சர்கள் குழு "ஒருவேளை' சாப்பாட்டு ச் செலவு உரூ. 87 ஆயிரம்





வறட்சியை ப் பார்வையிட்ட அமைச்சர்கள் குழு "ஒருவேளை' சாப்பாட்டுச்  செலவு உரூ. 87 ஆயிரம்

சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியை பார்வையிட வந்த அ.தி.மு.க., அமைச்சர்கள் குழுவிற்கு மதிய சாப்பாடு செலவு ரூ. 87 ஆயிரத்து 20 ரூபாயாகியுள்ளது. இந்த தொகையை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள்,12 பேரூராட்சிகள், 3 நகராட்சிகளிடம் "பங்கு தொகை' கேட்டு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட, மார்ச் 16ந்தேதி நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆறு அமைச்சர்கள் அடங்கிய குழு வந்து ஆய்வு செய்தனர்.(ரோட்டோரத்தில் மட்டும் சில நிமிடங்கள்). இக்குழுவினருக்கு மதிய உணவு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, 87 ஆயிரத்து 20 ரூபாய் செலவாகியுள்ளது. இத்தொகையை எந்த கணக்கில் எழுதுவது என்ற சிக்கல் உள்ளதால், மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியம்,12 பேரூராட்சி, மூன்று நகராட்சிகள் பங்கிட முடிவெடுக்கப்பட்டது. 12 ஊராட்சி ஒன்றியங்கள்,12 பேரூராட்சிகள் தலா ரூ.2 ஆயிரத்து 417ம், சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய நகராட்சிகள், தலா 9 ஆயிரத்து 670 ரூபாய் , பங்கு தொகையாக வழங்கி, ஒட்டு மொத்த செலவை ஈடு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அந்தந்த பி.டி.ஒ., - பேரூராட்சி செயல் அலுவலர், நகராட்சி ஆணையர்களுக்கு, "பங்கு தொகை' கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு, அ.தி.மு.க., உள்ளாட்சி தலைவர்கள் இசைவு தெரிவித்துள்ளனர். தி.மு.க.,வினர் தலைவராக உள்ள ஒன்றியம், பேரூராட்சிகளில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனை, எந்த செலவு கணக்கில் எழுதி, ஈடு கட்டுவதென அதிகாரிகள் திகைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலிருந்து, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்லும் வழியில், இளையான்குடி அருகே சில நிமிடங்கள் மட்டுமே ரோட்டோரத்தில் உள்ள விவசாய நிலங்களை ஆய்வு செய்த இந்த குழுவினரின், சாப்பாட்டு செலவு இவ்வளவா என கலங்கி நிற்கின்றனர் விவசாயிகள்.

- சிறப்பு ச் செ ய்தியாளர், தினமலர் -


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக