சனி, 16 மார்ச், 2013

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையம்: செ.., எதிர்ப்பு







மேற்கு த் தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையம்: செ.., எதிர்ப்பு


சென்னை: "மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையத்தை மத்திய அரசு அமைப்பது, மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் செயல்' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, அவர் எழுதியுள்ள கடிதம்: மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு வல்லுனர் குழுவை அமைத்து, அக்குழு மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையம் அமைப்பதற்கான பரிந்துரையை அளித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் கருத்தை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் கேட்கிறது. மேற்குதொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையத்தை அமைப்பது, சுற்றுச்சுழல் பாதுகாப்பு என்ற பெயரில், மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும். மாநிலங்களில் உள்ள வேளாண்மை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளுக்கு, ஆணை பிறப்பிக்கும் அமைப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்குகின்றனர். இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, நிலம் மாநில அரசின் பட்டியலில் வருகிறது. இந்நிலையில், நிலத்தில் செய்யும் பணிகளுக்கு, மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் என, நிர்பந்திப்பது, மாநில அரசின் அதிகாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதாகும். தமிழகத்தில் உள்ள இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் மற்றும் சட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம்.
குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்புக்கும், மலைப் பகுதிகள் மேம்பாட்டுக்கும், தனி விதிகளை வகுத்துள்ளோம். மேலும், மத்திய அரசின் பல்வேறு சட்டங்களை பின் பற்றியும் வருகிறோம். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு வல்லுனர் குழு, வனத்தை பாதுகாக்க சிறப்பான திட்டங்கள் எதையும் பரிந்துரைக்கவில்லை.

தமிழக வனத்தை பாதுகாக்கும் வகையில், மூன்று புலிகள் காப்பகம், மூன்று தேசிய பூங்காக்கள் மற்றும் எட்டு வன உயிரின சரணாலயங்களைக் கொண்டு, உரிய சட்டங்களை பின்பற்றி வருகிறோம். இச்சூழலில், மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையத்தை அமைப்பது, மேலும் ஒரு அதிகார மையத்தை உருவாக்கும் செயலே. வன பாதுகாப்பு என்ற பெயரில் தேவையற்ற அதிகார மையமாகவே இந்த ஆணையம் இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு வல்லுனர் குழுவின் பரிந்துரைகள் மீதான கருத்துக்களை, தமிழக அரசு அமைத்துள்ள சுற்றுச்சூழல் வனத் துறையின் சிறப்புக் குழு அளிக்கும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக