வெள்ளி, 29 மார்ச், 2013

தமிழர்களை க் கொன்று குவித்த வெறியைக் கொண்டாடும் இலங்கை







கொழும்பு: விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற்றதை உலகிற்கு பறைசாற்றும் வகையில், இலங்கை அரசு பயங்கரவாத சுற்றுலா ( டெரர் டூரிசம்) என்ற பெயரில் சுற்றுலாவை நடத்தி வருகிறது.

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்டப்போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்காக அதிபர் ராஜபக்சே உலக நாடுகளிடையே பெரும் கண்டனத்தை சம்பாதித்துள்ள நிலையில், தற்போது, தமிழர்களின் சோகத்தை தங்களது வெற்றியாகக் காட்டும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டு வருகிறது.இதன்படி, இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் வெற்றி பெற்ற இடங்களை காட்சிப்பொருளாக்கி, அதை தங்களது வெற்றியின் சின்னங்களாகக்கருதி, சுற்றுலாவாக வெளிநாட்டினருக்கு அதை எடுத்துக்காட்ட முயற்சி செய்து வருகிறது. பொதுவாக ஒரு நாடு எதிரி நாட்டுடன் நடத்திய போரில் கிடைக்கும் வெற்றியை அடிப்படையாகக்கொண்டு போர் நினைவிடங்களை அமைப்பது வழக்கம். ஆனால் இலங்கையோ, தனது சொந்த நாட்டு மக்களை கொன்றதை வெற்றியாக சித்தரித்து இத்தகைய போர் நினைவிடத்தை உருவாக்கியுள்ளது. பயங்கரவாத சுற்றுலாவின் ஒருபகுதியாக, விடுதலைப்புலிகள் பயன்படுத்திய வாகனங்கள் போரின் போது தீக்கிரையாக்கப்பட்ட எச்சம் தற்போது ஊமை சாட்சியாக விளங்கி வருகிறது. இதே போல், மனித உரிமை அமைப்புகளால் உலகின் மிகவும் பயங்கரமான இடம் என வர்ணிக்கப்படும் இடமும் இந்த சுற்றுலாவில் அடக்கம். இதில் கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல்மாதம் ஒரு லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல், கடந்த 2006ம் ஆண்டு கடற்கரை ஒன்றில் ஜோர்டான் நாட்டு கப்பலை ஒன்றை கைப்பற்றிய விடுதலைப்புலிகள் அந்த கப்பலை உடைத்து வாகனங்கள் செய்த இடமும் இடம்பெற்றுள்ளது. மேலும், போரின் போது விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசின் இந்த பயங்கரவாத சுற்றுலா உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.





 
தமிழர்களை க் கொன்று குவித்த வெறியை க் கொண்டாடும் இலங்கை அரசு: 
அதிர்ச்சி அறிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக