புதன், 20 மார்ச், 2013

திட்டமிட்டுத் திசை திருப்புகிறார்கள்:கலைஞர்கண்டனம்

தி.மு.க. கருத்தை த் திட்டமிட்டு த் திசை திருப்புகிறார்கள்: கருணாநிதி கண்டனம்
தி.மு.க. கருத்தை திட்டமிட்டு திசை திருப்புகிறார்கள்: கருணாநிதி கண்டனம்
சென்னை, மார்ச். 20-

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கை அரசாலும், இலங்கை அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்களாலும், இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க்குற்றங்கள் என்றும், இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும்; "நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து, குறிப்பிட்ட கால வரையறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்;  தி.மு.க. இரண்டு திருத்தங்களை வலியுறுத்தியது. அந்தத்  திருத்தங்களை, இந்திய நாடாளுமன்றத்தில் உடனடியாகத் தீர்மானமாக நிறைவேற்றி; அமெரிக்கத் தீர்மானத்தில் அந்தத் திருத்தங்களையும் இணைத்து ஆதரித்திட வேண்டும் என்று 19.3.2013 அன்று நான் சொன்னேன்.

நான் தெளிவாகச் சொன்னதை, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும்,  ஒரு சில ஊடகங்களும்  சரியாகப் புரிந்து கொள்ளாமலோ அல்லது உள்நோக்கத்துடனோ; ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக, இந்திய நாடாளு மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலே போதும் என்று நான் சொன்னதைப் போல விமர்சனம் செய்திருப்பது கண்டனத்திற்குரியதாகும்.

இலங்கையில் ராஜபக்சே அரசால் நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்பதையும், நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதையும், அந்த ஆணையம் குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்பதையும் முதலில் இந்திய அரசு ஏற்றுக் கொண்டு, அதனையொட்டி நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிட வேண்டும். அந்தத் தீர்மானத்தை அமெரிக்கத் தீர்மானத்தோடு இணைத்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வர வேண்டு மென்பதுதான் நமது விருப்பமும் வேண்டுகோளு மாகும்.

ஆனால் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை, அமெரிக்கத் தீர்மானத்தில் இப்போது இடம்  பெறவில்லை. அதற்குப் பதிலாக, இலங்கை அரசே விசாரணை நடத்த  வேண்டு மென்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப் போனதற்குப் பின்னணியில் இந்தியாவும் உள்ளதாக "அம்னெஸ்டி இண்டர் நேஷனல்'' எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இப்படி அமெரிக்கத் தீர்மானம் பெருமளவுக்கு நீர்த்துப் போய்விட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்ற ஆய்வின்போது, இலங்கை அரசு சார்பில் வைக்கப்பட்ட அறிக்கையை, இந்தியாவின் சார்பில்  முழுவதுமாக ஏற்றுக் கொண்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கிறது.

தி.மு.கழகம் முன்வைத்த திருத்தங்களும் மத்திய அரசால் முறையாக பரிசீலிக்கப்படவில்லை. இந்தச் சூழ்நிலைகளிலேதான் தி.மு.கழகம் தனது நிலைப்பாட்டை அறிவித்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வது என்ற முடிவை மேற்கொண்டது. இதனைத் தெளிவாக தி.மு.கழகம் தெரிவித்திருந்த போதிலும் வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு திசைதிருப்பி விஷமப் பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக