திங்கள், 25 பிப்ரவரி, 2013

கொரியாவில் தமிழ்!

 


கொரியாவில் தமிழ்!
 
தமிழுக்கும், கொரிய மொழிக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்து, ஆராய்ச்சி செய்யும் ஜுங் நாம் கிம்: நான், கொரிய நாட்டில், தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்யும், கூட்டமைப்பின் தவைராக உள்ளேன். 2010ம் ஆண்டில், கோவையில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில், கொரிய தீப கற்பத்தில் பயன்படுத்தப்படும் கொரிய மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையே உள்ள, ஒற்றுமைகளை ஆராய்ந்து, ஆய்வறிக்கையாக சமர்ப்பித்தேன். தமிழ் மற்றும் அதிலிருந்து பிரிந்த, கிளை மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய, திராவிட மொழி குடும்பங்கள், ஒரே நிலப் பகுதியைச் சேர்ந்ததால், இம்மொழிகளில் ஒற்றுமைகள் உள்ளன. ஆனால், தமிழகத்திலிருந்து, 4,000 மைல்களுக்கும் தூரத்தில் உள்ள, வட கொரியா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட, கொரிய தீபகற்பத்தில் பேசப்படும், கொரிய மொழிக்கும், தமிழ் மொழிக்கும், ஏன் ஒற்றுமை ஏற்படுகிறது, அது எப்படி சாத்தியம் ஆனது என்று, ஆய்வு செய்தேன். தமிழர்கள், "நீ திரும்பி வா' என்று சொல்வதை, கொரியர்களாகிய நாங்களும், கொரிய மொழியில், "நீ திரு வா' என்று, சிறிது மாறுபட்ட தொனியில் சொல்கிறோம். இது எப்படி சாத்தியமாயிற்று? இது உதாரணம் மட்டுமே. இது போன்று, 500 வார்த்தைகள் தமிழிலும், கொரியாவிலும் ஒரே மாதிரியாக உள்ளன. கொரிய வீடுகளில், புதிதாக குழந்தைகள் பிறந்தால், மா இலை தோரணம் கட்டுவது வழக்கம்; தமிழ் நாட்டிலிலும், மா இலை தோரணம் கட்டுகின்றனர். இது போன்ற ஒற்றுமைக்கு, என்ன காரணம் என்று ஆராய்ந்ததில், பண்டைய தமிழர்கள் கடல் கடந்து, கொரியாவில் தங்கியிருந்ததால், அவர்களின் தமிழ் மொழியும், கலாச்சாரமும், கொரிய மக்களோடு கலந்திருக்கலாம். ஏனெனில், 15ம் நூற்றாண்டில் தான், கொரிய மொழிக்கு, எழுத்து வடிவமே கிடைத்தது; அதுவரை பேச்சு மொழியாகவே இருந்தது. எழுத்து வடிவம் மாறினாலும், பேச்சு வழக்கு மற்றும் ஒலி வடிவத்தில் மாற்றம் ஏற்படாததற்கு, இது தான் முக்கிய காரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக