வியாழன், 14 பிப்ரவரி, 2013

4 தமிழர்களை விடுதலை செய்: இராமதாசு

தூக்கு த் தண்டனையை ஒழிக்க வேண்டும்; 4 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: இராமதாசு


பாலாறு கண்ணிவெடித் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
பாலாறு கண்ணிவெடி தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட  4 தமிழர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துவிட்டதாகவும்,  அடுத்த இரு வாரங்களில் அவர்கள் தூக்கிலிடப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீசை மாதையன், சைமன், ஞானப்பிரகாசம், புலவேந்திரன் ஆகிய 4 பேருமே அப்பாவிகள். கண்ணிவெடித் தாக்குதலுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் மொத்தம் 124 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த போதிலும், அவர்களில் 117 பேர் விசாரணை நீதிமன்றத்திலேயே விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். மீதமுள்ள இவர்கள் 4 பேர் உட்பட 7 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த போது, மூவரை விடுதலை செய்த உச்சநீதிமன்றம், இந்த நால்வர் மீதான இரு குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்தனர்.
தடா சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தடா  என்ற அடக்குமுறை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் இச்சட்டம் காலாவதியாக அனுமதிக்கப்பட்டது. இப்படி காலாவதியான ஒரு சட்டத்தின் அடிப்படையில்  4 அப்பாவிகளின் உயிர்களை பறிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
காந்தியடிகளும், புத்தரும் பிறந்த இந்திய மண்ணில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்துவருகிறது. ஆனால், இந்திய அரசோ மனித உயிர்களுக்கும், உரிமைகளுக்கும் சற்றும் மதிப்பளிக்காமல் தூக்கு தண்டனைகளை அரங்கேற்றிவருகிறது. அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் ஒட்டுமொத்தமாக இரண்டு கருணை மனுக்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், புதிய குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவிக்கு வந்த 7 மாதங்களில் 4 தமிழர்கள் உட்பட 7 பேரின் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, இதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதோ என்ற ஐயம் எழுகிறது.
அப்சல் குருவின் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், அதை எதிர்த்து அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்வதற்குக்கூட அவகாசம் தராமல் ரகசியமாக அவரை மத்திய அரசு தூக்கிலிட்டது. அதேபோல் 4 தமிழர்களின் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்றுவரை வெளியிடாமல், அவர்களை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை அரசு ரகசியமாக செய்துவருகிறது. இத்தகைய போக்குகள் சரியானவை அல்ல.
மனிதர்களின் உயிர்வாழும் உரிமையை பறிப்பதை விட மிகக்கொடிய மனித உரிமை மீறல் எதுவும் இருக்கமுடியாது. எனவே, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 தமிழர்களையும் விடுதலை செய்வதுடன், இந்தியாவில் தூக்கு தண்டனையை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக