புதன், 9 ஜனவரி, 2013

கேரளப் புது அணைத் திட்டத்தில் விழுந்தது "மண்'

தேனி: வன உயிரின சரணாலயத்தை சுற்றி, "சுற்றுச்சூழல் பாதுகாப்பு வளைய' பரப்பை விரிவுபடுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், முல்லைப் பெரியாறு அணை அருகே, புது அணை கட்ட திட்டமிட்டுள்ள, கேரள அரசின் கனவில் மண் விழுந்துள்ளது.


சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், மேகமலை வன உயிரின சரணாலயம், பெரியாறு புலிகள் சரணாலயம் என, மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி முழுதும், "மிகவும் பாதுகாக்கப்பட்ட' வனப்பகுதியாக மாறியுள்ளது. தேனி, மேகமலை வன உயிரின சரணாலயம், 68 ஆயிரம் ஹெக்டேரில் அமைந்துள்ளது.
வன உயிரின சரணாலயங்களை சுற்றி, "சுற்றுச்சூழல் பாதுகாப்பு வளையம்' என, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, சரணாலயத்தை சுற்றி 2 கி.மீ., வரை கட்டடம், தொழிற்சாலை, ரோடு உள்ளிட்ட பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வளையம் :

வனப்பகுதிகளை பாதுகாக்கும் வகையில், "சுற்றுச்சூழல் வளையத்தை' 8 கி.மீ., அளவுக்கு விரிவுபடுத்த ஆலோசிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், கூடுதலாக 2 அல்லது 3 கி.மீ., வரை, "பாதுகாப்பு வளையத்தை' விரிவுபடுத்த, சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்து, ஆய்வுப் பணிகள் நடக்கின்றன. இதனால், சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில், கட்டுமானப் பணிகள் தடை செய்யப்படும். பெரியாறு அணை அருகே, புது அணை கட்ட, கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம், பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதிக்குள் (சுற்றுச்சூழல் வளைய விரிவாக்கத்தால்) வந்து விடும். இதனால், கேரளாவின் புது அணை கனவில் மண் விழுந்துள்ளது. மேலும், தமிழக எல்லையோர வனப்பகுதியில், கேரள மருத்துவக் கழிவுகளை கொட்டுவதும் தடை செய்யப்படும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக