சனி, 26 ஜனவரி, 2013

மனிதர்களைக் கண்டால் நிறம் மாறும் பூ

மனிதர்களை க் கண்டால் நிறம் மாறும் பூ


மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபடும், சித்த ஆகம ஆராய்ச்சியாளர் ஈஸ்வரன்: முப்பது ஆண்டுகளாக, நானும், என் நண்பர்களும், பல முறை மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடருக்குள், சென்று வந்திருக்கிறோம். கடந்த முறை சென்றபோது, இரண்டு நாட்கள் காட்டுக்குள்ளேயே, தங்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. மலை உச்சியில், ஒரு மரம் நீல நிறப் பூக்களோடு அழகாய் காட்சியளித்தது. நீல நிற பூக்கள் இருந்த மரத்தை நோக்கி நடந்தோம். மரத்தை விட்டு தள்ளி இருந்த போது, எந்த மாற்றமும் தெரியவில்லை. மரத்தடியில், 10 நிமிடங்கள் இளைப்பாறிய போது பார்த்தால், நீலநிற பூக்கள் அடர்ந்த ஊதா நிறத்தில், "பளிச்'சென்று மாறின. அப்போது தான், முற்றிலும் மறைந்ததாக கருதப்பட்ட, காணக் கிடைக்காத, "சர்க்கரை வில்வ மரம்' அது என, தெரிந்தது. "காயாம்பூ' என அழைக்கப்படும் இந்த மரத்தின் பூக்கள், வெளிறிய நீல நிறத்தில் இருக்கும். 10 அடி தொலைவில், மனிதர்கள் யாராவது வந்தால், அதை உணர்ந்து பூக்கள், அடர் ஊதா நிறத்துக்கு மாறி விடுகின்றன. இப்படி ஒரு ஆச்சரியம், அறிவியலுக்கும் எட்டாதவையாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் காணப்படும், ஒரு சில தாவரங்களும், விலங்குகளும், உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காதவை. அரிய வகை, வரை ஆடுகள் அதிகம் காணப்படுகின்றன. இம்மலைக்கே உரித்தான, பல மூலிகைச் செடிகளின் மருத்துவ குணங்களைப் பற்றி, அகத்திய சித்த நூல்களில் கூறப்பட்டுள்ளது. அந்த அரிய தாவரங்களில், " சர்க்கரை வில்வ மரமும்' ஒன்று. பல ஆண்டுகளாக, எவர் கண்ணிலும் படாததால், அழிந்து போய்விட்டதாக கருதப்பட்டது. ஒவ்வொரு முறை, மலைக்கு செல்லும்போதும், 50 மரக் கன்றுகளை நட்டு வருகிறேன். இந்த முறை சென்ற போது, மலையை சுத்தம் செய்து, 30 கிலோ பிளாஸ்டிக் குப்பையை நீக்கி, அங்கிருந்து எடுத்து வந்திருக்கிறேன். மேற்குத் தொடர்ச்சி மலையில், எண்ணற்ற மருத்துவ மூலிகை மரங்கள் உள்ளன. அவற்றை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக