செவ்வாய், 25 டிசம்பர், 2012

தில்லிக்கும், தமிழகத்துக்கும் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு - கலைஞர்


ஆட்சியில் உள்ளபொழுதும் மத்தியஅரசைத்தாங்கும் பொழுதும் மனச்சான்றைப் புதைத்தும்  ஆட்சியில் இல்லாத பொழுதும் மத்திய அரசைத் தாக்கும் பொழுதும் மனச்சான்றை எழுப்பி விட்டும் அருமையாகப் பேசுவதிலும் எழுதுவதிலும் கலைஞர் தன்னிகரற்றவர். ஈழத்தில் ஆயிரக்கணக்கான சிறுமிகள்,  தாய்மை நிலையில் இருந்தவர்கள்,  திருமணமானவர்கள், மூதாட்டிகள், பெண்போராளிகள், எனப் பல நிலைகளில்  கொடூரக் கற்பழிப்புகள் நடந்த பொழுதும் பிறப்பு உறுப்புகளில் வெடிகுண்டுகளை வைத்து வெடிக்கச் செய்தும்  உயிரைப்பறித்த பின்பும் இழிவாகவும்  கூட்டாளியின் கூட்டாளியாகிய சிங்களர்கள் நடந்து கொண்ட பொழுதும்  தொடர்பான காட்சிப்பதிவுகளும் படங்களும் வந்த பொழுதும் பழைய பதிவு எனக்கூறி அவற்றிற்கு எதிர்ப்பு தேவையில்லை என மூடிமறைத்த பொழுதும் கண்களையும் வாயையும் மூடிக் கொண்டடிருந்து விட்டு, தம்முடைய ஆட்சியில் காவலர்களாலும் வனத்துறையினராலும்  கற்பழிப்புகள் நடந்த பொழுது அமைதி காத்துவிட்டு இப்பொழுது கூக்கூரல் இடுவது போன்றதுதான் தில்லிக்கும் தமிழகத்திற்கும் உள்ள ஏற்றத்தாழ்வு என்பதை இப்பொழுது மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றார்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


தில்லிக்கும், தமிழகத்துக்கும் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு : கருணாநிதி

மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் டெல்லிக்கும், தமிழகத்துக்கும் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு என்று கருணாநிதி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் அனுப்பிய அறிக்கையில், டெல்லியில் பேருந்து ஒன்றில், 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மாணவி கற்பழிக்கப்பட்ட
நிகழ்ச்சிக்கு நீதி கோரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதில் மாணவர்கள் 100 பேர் காயமடைந்துள்ளனர். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா வீட்டிற்கு முன்பு மாணவர்கள் தர்ணா நடத்தியிருக்கிறார்கள்.
போராட்டம் நடத்திய மாணவர்கள் ஐந்து பேர் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் அவரது இல்லத்தில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளையெல்லாம்
தெரிவித்திருக்கிறார்கள். கோரிக்கைகள் அனைத்தையும் அனுதாபத்தோடு கேட்டுக் கொண்ட சோனியா காந்தி அவர்கள், அவர்களது முக்கிய கோரிக்கையான பலாத்காரக் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தைத் திருத்த வேண்டும் என்பதை ஏற்கத் தயார் என்று உறுதி அளித்திருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “இந்தப் பிரச்சினையில் பொது மக்களின் கோபம் நியாயமானதுதான். இந்தக் கற்பழிப்பு வழக்கிலே சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். அவர்களை விட்டு விட மாட்டோம்” என்று உறுதி கூறியிருக்கிறார்.
இந்தக் கற்பழிப்பு பற்றி விசாரிக்கவும், பாலியல் பலாத்கார குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்வது பற்றி பரிந்துரைக்கவும் உச்ச நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கற்பழிப்பு எங்கே நடைபெற்றாலும் அது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். அது டெல்லி யிலே நடைபெற்றாலும் எதிர்க்க வேண்டியது தான், தமிழகத்திலே நடைபெற்றாலும் எதிர்க்க வேண்டியதுதான். ஆனால் தமிழகத்திலே நடைபெறுவது என்ன? டெல்லியிலே கற்பழிப்புச் சம்பவம் நடைபெற்ற அடுத்த இரண்டாம் நாள், 20-12-2012 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில், செய்துங்க நல்லூரை அடுத்த கிளாக்குளம் கிராமத்தில் புனிதா (வயது 13), நாசரத்தில் உள்ள மகளிர் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். அன்றைய தினம் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
21ஆம் தேதி காலையில் பள்ளி செல்லும் வழியில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில், சீருடை அணிந்த மாணவி கலைந்த ஆடையோடு பிணமாகக் கிடப்பதாகச் செய்தி பரவியது. அந்த மாணவியின் முகத்தை பலவந்தமாக தாக்கியதற்கான காயங்களும், நகக் கீறல்களும் இருந்திருக்கின்றன. அவள் பள்ளிக்குச் சென்ற போது வழி மறித்து காட்டுப் பகுதிக்குத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும், பின்னர் சுடிதாரின் துப்பட்டாவினால் அவளது கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதும் வெளிப்பட்டது.
டெல்லியிலே கற்பழிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி நல்ல வேளையாக உயிரோடு இருக்கிறார். ஆனால் தமிழகத்திலே 13 வயதே நிரம்பிய, ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த புனிதா கற்பழிக்கப்பட்டதோடு, கொலையும் செய்யப்பட்டிருக்கிறாள். புனிதாவின் கொலைக்காக கிளாக்குளம் கிராம மக்கள் சம்பவத்தைக் கண்டித்து சாலை மறியல் நடத்தியிருக்கிறார்கள். புனிதா படித்த பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு போராட்டத்திலே ஈடுபட்டுள்ளார்கள். டெல்லியில் கற்பழித்தவர்களும் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் புனிதாவைக் கற்பழித்தவனையும் காவலர்கள் கைது செய்துள்ளார்கள். ஆனால் டெல்லியிலே மத்திய அரசும், அந்த மாநில அரசும் அங்கே நடைபெற்ற சம்பவத்திற்காக நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், “தமிழகத்திலே ஓர் அரசு இருக்கிறதா? கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஏழை புனிதாவிற்காக தமிழக அரசு சார்பில் ஏதாவது நடவடிக்கை உண்டா? டெல்லியில் நடைபெற்றதும் கற்பழிப்பு தான், தமிழகத்திலே நடைபெற்றதும் கற்பழிப்பு தானே? டெல்லி சம்பவத்திற்காக பிரதமரே அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் தமிழகத்திலே கொலையே செய்யப்பட்ட புனிதாவின் குடும்பத் தாருக்கு அரசின் சார்பில் யாரோ ஒரு அமைச்சராவது சென்று ஆறுதல் கூறியது உண்டா? தமிழகத்திலே அரசு என்ற ஒன்று இருக்கிறதா? தமிழ்ச்சாதி என்பதால் புனிதாவின் கொலை சாதாரணமாகி விட்டதா?”
பாலியல் குற்றங்கள் கொடுமையானவை மட்டுமல்ல; கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படவேண்டியவை என்பதிலே கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை. எனினும் குற்றத்தின் தன்மை ஒரேமாதிரியாக இருக்கும் போது, இடத்துக்கு இடம், அதனைக் கண்டித்திடும் தொனியில் சில அரசியல் கட்சிகள், வேறுபாடு காட்டுவது வினோதமாக மட்டுமல்ல - வேதனை தருவதாகவும் இருக்கிறது.
சில தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பட துறையைச் சேர்ந்தவர்கள் கூட டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு குரல் கொடுத்துள்ளனர். ஆனால், புனிதாவைப் பற்றிய ஞாபகம் அவர்களுக்கு வரவில்லையே என்பது வருத்தத்துக்குரியது.
இந்த நிலையில்தான் வரும் 26ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.
அதன்படி, புதனன்று  தூத்துக்குடியில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக