ஞாயிறு, 23 டிசம்பர், 2012

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழு க் கல்வி க் கட்டணத்தை அரசே செலுத்தும்: செயலலிதா

பாராட்டத்தக்கத் திட்டம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழு க் கல்வி க் கட்டணத்தை அரசே செலுத்தும்:  செயலலிதா உத்தரவு
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்: ஜெயலலிதா உத்தரவு
சென்னை, டிச. 23-

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி க் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ், பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கின்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயிலுவதற்காக சிறப்புக் கட்டணம், கற்பிப்புக் கட்டணம், புத்தகக் கட்டணம் ஆகியவற்றை கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் 1980ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணமாகும். அதன் பிறகு கல்வி நிறுவனங்கள், கற்பிப்புக் கட்டணம், சிறப்புக் கட்டணம் ஆகியவைகளை உயர்த்தியுள்ள போதிலும், கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் எந்தவித மான மாற்றமும் செய்யப்படாமல், 1980ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகையே இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, தற்போது கல்லூரிகளில் அதிகரித்துள்ள கற்பிப்புக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் ஆகியவற்றினால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களின் கல்வி மற்றும் மாணவ, மாணவியர் சேர்க்கையில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதிருக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு, தேர்வுக் கட்டணம் முழுமையாக வழங்குவது போல், அவர்கள் செலுத்தும் கற்பிப்புக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் ஆகியவற்றை, பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ் முழுமையாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தொழிற்முறை கல்விகளான பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு ஒற்றைசாளர முறையில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு, அரசு கல்லூரிகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் கட்டணத்தை முழுமையாக பள்ளி மேற்படிப்பு உதவித் திட்டத்தின் கீழ் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இனி வருங்காலங்களில், அரசில் உள்ள பல்வேறு துறைகள், தங்கள் துறைகளைச் சார்ந்த படிப்புகளுக்கான கல்விக் கட்டணங்களை உயர்த்தும் சமயங்களில் எல்லாம், தனியாக எந்தவிதமான அரசு உத்தரவினையும் எதிர்நோக்காமல், கல்வித் தொகை அறிவிக்கையில் மாற்றம் செய்து, அரசுத் துறைகளால் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணங்களை உடனடியாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ் உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக அரசுக்கு 16.54 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இதனால் 74,181 மாணவ, மாணவியர்கள் பயன் அடைவர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விடுதிகளிலும், மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இயங்கி வரும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதே போன்று, பெரம்பலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் ஆகிய 8 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவியர்கள் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி பெறுவதற்கு வசதியாக அவர்களுக்கும் விலையில்லா சிறப்பு வழிகாட்டிகள் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக 2.47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், இந்த மாவட்டங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் 2,21,400 மாணவ, மாணவியர்கள் பயன் பெறுவர். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் பெரிதும் பயன் அடைவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக